பழந்தமிழர் இலக்கியங்களில் வானியல்

                                    பழந்தமிழர் இலக்கியங்களில் வானியல்

சங்க இலக்கியங்களை  உலக இலக்கியங்கள் பலவற்றைக் காட்டிலும் போற்றத்தக்க வகையில் அவற்றில் பற்பல துறைகள் சார்ந்த செய்திகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக வானியல் பற்றிய குறிப்புகள் ,நிகழ்வுகள் பற்றிய பல செய்திகளையும்  சங்க காலப்புலவர்கள் பொதிந்து வைத்துள்ளனர்.

வானியல் என்பது, விண்வெளியில் உள்ள பொருட்கள் மற்றும் 

நிகழ்வுகளைப் பற்றிப் படிக்கும் இயற்கை அறிவியல். இது கணிதம்

இயற்பியல், வேதியியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி விண்பொருட்களைப் 

பற்றிப் படிக்கும் அறிவியல் ஆகும்.வானியல் என்ற ஆங்கிலச் சொல் 

'அஸ்ட்ரோனோமி' (Astronomy) என்பதிலிருந்து வந்தது. 

கிரேக்க மொழியில் 'அஸ்ட்ரோனோமி' என்றால் 'நட்சத்திரங்களின் 

விதிகளைப் படிக்கும் அறிவியல்' என்று பொருள். 

மழை பொழியும் விதம்  

வானத்தில் இருந்து பெய்யும் மழையின் விதத்தை

முல்லைப்பாட்டு மிக அழகாக அறிவியல் அடிப்படையில்

கூறியுள்ளது.

நனந்தலை உகலம் வளைஇ நேமியோடு 

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்

பாடிமிழ் பனிகடல் பருகி வலன்ஏர்பு

கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி

பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை ( முல்லைப்பாட்டு 1-6)

என்ற இந்தப் பாடலடிகள் மேகத்தின் செயல்பாடுகளை  அறிவியல் அடிப்படையில் கூறுகிறது.

பனிகடல் பருகி வலப்புறமாக எழுந்த மேகமானது வானப்பரப்பிற்குச் சென்று, குளிர்ந்த காற்று பட்டதும் வானத்திலிருந்து மழையாகப் பொழிந்தது என்று முல்லைப்பாட்டு வழி புலவர் பதிவு செய்கிறார்.

வெள்ளி மீன்

வானத்தில் உள்ள வெள்ளி என்ற கோள் வடக்கு திசை நோக்கிச்

சென்றால் மழை அதிகமாகும் என்றும் தென்திசை நோக்கிச்

சென்றால் மழை  குறையும் என்பது சங்க மக்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது .  

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் ( புறம். 35.7) என்று வெள்ளக்குடி நாகனாரும்,

தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும் ( புறம் 117.2) என்று கபிலரும்,

‘‘வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

திசை திரிந்து தெற்கு ஏகினும்

தற்பாடிய தனி உணவில்

புட்டேம்பப் புயன்மாறி

வான்பொய்ப்பினும் தான் பொய்யா

மலைத்தலைய கடற்காவிரி’’ (பட்டினப்பாலை 1-6)

என்று கடடியலூர் உருத்திரங்கண்ணனாரும் பாடியிருக்கும் பகுதிகள் வெள்ளி மீனின் செயல்பாடுகளைச் சங்க இலக்கியங்கள் பாடியிருக்கிறது.

உலகின் தோற்றம்

உலகின் தோற்றத்தையும், உலகின் இயக்கத்தையும் அறிந்தவர்களாக சங்க மக்கள் இருந்தமையை  பதிற்றுப்பத்தில் இடம் பெறும் இவ்வரிகள் காட்டுகிறது.

நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்,

ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை;

ஐந்து பூதங்களில் கூட்டுச் சேர்க்கையால் ஆகியது உலகம்

இதில் நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல் போன்றவற்றின் இயக்கத்தால் பூமி நடைபெறுகிறது என்பதை அறியாலாம் .

கோளறு பதிகம் :

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி

சனிபாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே. என்னும் திருஞான சம்பந்தர்

பதிகத்தில் 9 கோள்கள் பற்றி செய்தி காணப்படுகிறது.  

கோள்கள்

செஞ் ஞாயிற்றுச் செலவும்,

அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,

வளி திரிதரு திசையும்,

வறிது நிலைஇய காயமும், என்று இவை

சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்

இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் (புறநானூறு 30)

என்ற பாடல் ஞாயிற்று மண்டலம் என்ற ஞாயிற்றைச் சுற்றியிருக்கும் கோள்களின் வரிசையையும்  குறிக்கிறது .

 பரிப்பு சூழ்ந்த மண்டிலம் என்பது சூரிய குடும்பத்தைக் குறிப்பதாகும். இதன் மூலம் சங்கக் காலப்புலவர்கள் சூரியனை மையமாகக் கொண்ட  வானியல் நிலையை அறிந்துள்ளனர் . சென்று அளந்து அறிந்தோர் என்ற தொடர் வானியல் அறிவு வாய்க்கப்பெற்றவர் என்று பொருள் தரக்கூடியது.

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து எனப் பட்டினப்பாலை உரைப்பதும் வான மண்டலம் இருப்பதை உறுதி செய்கின்றது.

சூரியன்/ ஞாயிறு / ரவி /கதிரவன்

ஞாயிற்றின் தோற்றம். மறைவு, பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் காணமுடிகின்றது. .

வாள் நிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த

இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து ( சிறுபாணாற்றுப்படை)

என்ற தொடரில் கோள்கள் அனைத்தும் ஞாயிற்றினைச் சுற்றி அமைந்துள்ளன என்ற கருத்து பெறப்படுகின்றது.

பல் இருள் விடிய புலம்பு சேண் அகல

பாய் இருள் நீங்க பல்கதிர் பரப்ப

ஞாயிறு குண முதல் தோன்றியாஅங்கு ( பதிற்றுப்பத்து 59)

என்ற பதிற்றுப் பத்து அடிகள் ஞாயிறு கிழக்கில் தோன்றி உலக

இருள் அகற்றும் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது,

சூரியனின் மறைவு

சுடர்கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு

குட கடல் சேரும் படர் கூர் மாலையும்  (அகம் 378)

என்ற பகுதி சூரியன் மேற்கில் மறையும் தன்மையைக் காட்டுகின்றது.

சூரியனின் ஒளி

 நட்சத்திரங்களை விட சூரியனின் ஒளி மிகப் பிரகாசமானது. இதன் காரணமாகச் சூரியனின் ஒளியில் மற்ற நட்சத்திரங்கள் தென்படுவதில்லை. இதனைப் பதிற்றுப்பத்து

‘‘மாஇரு விசும்பின் பல் மீன் ஒளி கெட

ஞாயிறு தோன்றியாங்கு’’ ( பதி. 64)

என்ற இவ்வடிகளில் இரவில் விண்மீன்கள் ஒளிவிட்டுக் கொண்டிருப்பதும் பகலில் சூரியனின் ஒளியில் காணாமல் போவதும் காட்சிப் படுத்துள்ளது.

சூரியனின் உட் பகுதி எரிந்து கொண்டே இருக்கக் கூடியது என்பதை

‘‘வான மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ்சுடர்

கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிறு’’ ( நற்றிணை 163)

என்ற பாடலடிகளில் அகம் கனலியாக எனும் சொற்கள்  அகத்திலே கனன்று கொண்டிருக்கக் கூடிய தன்மையை உடைய சூரியன்  என்று கூறுகிறது .

பூமி

பூமியும் வானத்தில் ஒரு கோளாகும். இப்பூமி சூரியனை மையமாக வைத்துச் சுழல்கிறது. மேலும் தன்னைத் தானேயும் அது சுற்றி  வருகின்றது. இதனைத் திருமுருகாற்றுப்படை

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு

ஓஅற இசைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி  (திருமுருகாற்றுப்படை. 1-3)

என்கிறது .

புதன்

புதன் பற்றிய குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.

 புந்தி மிதுனம் பொருந்த என்ற பாடலடி புதன் கோளைப் பற்றியதாகும்.

வெள்ளி

வெள்ளி என்பதை வெண்மீன், சீர்சால் வெள்ளி என்று பலவாறு சங்கப்பாடல்கள் சுட்டுகின்றன .

வெள்ளி  தென்புலத்து உறைய விளைவயல்

பள்ளம் வாடிய பயன் இல் காலை ( புறநானூறு. 388)

என்ற குறிப்பு வெள்ளி மீன் இயக்கத்தைச் சுட்டுவதாக உள்ளது.

வெள்ளிமீன் விடிகாலையில் வானத்தில் விளங்கும் காட்சியை

வைகுறு மீனின் தோற்றம் ( அகம் 17)

வைகுறு மீனின் பைபயத் தோன்றும் ( பெரும்பானாற்றுப்படை 318)

குணக்குத் தோன்றும் வெள்ளியின் ( நற்றிணை 356).

செவ்வாய்

செம்மீன் என்று இதனைச் சங்கத்தார் அழைத்தனர். பரிபாடலில் படிமகன் என்று இது சுட்டப்பெறுகின்றது. பதிற்றுப்பத்திலும் இக்கோள் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.

வியாழன்

‘‘தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்

கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ’’ (புறநானூறு 392)

என்ற பாடலடிகள் வழியாக வியாழன் சுட்டப்படுகின்றது எனத் தெளியமுடிகின்றது.

சனி

சனிக் கோளை மைம்மீன் என்று சங்கத்தார் அழைத்துள்ளனர். மைம்மீன் என்றால் கருமையான கோள் என்று பொருள். ‘‘மைம்மீன் புகையினும் ’’ ( புறம் 117) என்று இதனைக் கபிலர் பாடியுள்ளார்.

திங்கள்

வளர்பிறை நிலவு, தேய்பிறை நிலவு இவற்றையெல்லாம் சங்கப்புலவர்கள் பாடியுள்ளனர். இதனை முறையே அலர்தரு பக்கம் என்றும், வழியது பக்கம் என்றும் அழைத்துள்ளனர்.
பல் மீன் நடுவண் திங்கள் போலவும், (மதுரைக்காஞ்சி 219) , பல் மீன் நடுவண் பால் மதி போல,( சிறுபாணாற்றுப்படை) என நிலவு விண்மீன்கள் சூழ இருக்கும் காட்சியைச் சங்கப் புலவர்கள் கவனித்துள்ளனர்.

பிறையைத் தொழும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்துள்ளது.

நாள்மீன்

சங்க இலக்கியத்தில் கார்த்திகை, உரோகினி, உத்திராடம், மகம், உத்தரம், திருவோனம், போன்ற பல நட்சத்திரங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் (நற்றிணை 202),

 அறுமீன் சேரும் அகல் இரு நடுநாள் (அகநானூறு 141) என்ற

குறிப்புகள் கார்த்திகை நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் ஆகும். கார்த்திகை நட்சத்திரம் என்பது ஆறு பெரிய நட்சத்திரங்களின் தொகுதி ஆகும் .

 மேற்கண்ட அகநானூற்றுப் பாடலில் திருமணம் நாள் பார்த்து நடந்தமையைப் பதிவிட்டுள்ளது .

முரண்மிகு சிறப்பின் செல்வனோடு நிலைஇய

உரோகினி நினைவனள் நோக்கி (நெடுநல்வாடை 161-163)

என்ற அடியில் உரோகினி பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

ஆகாயம்.

ஆகாயத்தைக்  காயம் என்றும் கூறுவர். ஞாயிறு , திங்கள் ஆகியவை காய்வதால் காயம் எனப்பட்டது .

மண்டிலம்

மண்டு என்ற சொல்லுக்கு வளைதல் என்று பொருள் . கோள்கள் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றுவதைக் கொண்டு இப் பெயர் பெற்றது.

அருந்ததி

பதிற்றுப்பத்தில் மணப்பெண் அருந்ததி என்னும் விண்மீன் பார்த்த செய்தியைக் குறிக்கிறது.

தலைநாண்மீன்

ஞாயிறு மேற்குத் திசையில் மறையும் வேளையில் கிழக்கில் தோன்றும் முதல் நாள்மீன் தலைநாண்மீன் என்றழைக்கப்படும். கத்தியை பதினைந்து நாளுக்கு ஒருமுறை இது மாறும். முதல் பதினைந்து தலையெடுக்கும் (தோன்றும்) மீன் என்பதால் அவ்வாறு அழைக்கப்ட்டது. படுகின்றநாள்களில் அகவினி தோன்றினால் அடுத்த பதினைந்து நாள்கள் பரணி பழந்தம் தோன்றும் அதற்கடுத்த பதினைந்து நாள்கள் கார்த்திகை தோன்றும்.

நிலைநாண்மீன்

நள்ளிரவில் உச்சியில் நிலைபெற்று நிற்கும் மீன் நிலைநாண்மீன்..

தொல்நாண்மீன்

மேற்குத் திசையில் சென்று மறையும் மீன் தொலைநாண்மீன். தொலையும் (கண் காணாதபடி மறைதல்) மீன் தொல்நாண்மீன்.

ஓரை

 ஓரை எனும் சொல்லுக்கு முகூர்த்தம் என்பது பொருள். ஓர்தல் என்பதற்கு ஆய்ந்து அறிதல் என்பது பொருள். நல்ல நேரம் அல்லது நல்ல காலம் பார்த்து தொடங்கும் பழக்கத்தைக் காண முடிகிறது.

செந்தீச் சுடரிய ஊழியும்

பூமி உருவானபோது ஒரு நெருப்புப் பந்துபோலவும், 

நெருப்புக் குழம்பாகவும் இருந்து எரிகற்களும் வால்மீன்களும் தொடர்ந்து 

பூமியைத் தாக்கின. இதனையே பரிபாடல், 'செந்தீச் சுடரிய' ஊழியும் என்று 

விளக்குகிறது. இப்படியாக ஓர் ஊழிக்காலம் உருண்டோடியது.

பரிபாடலில் பேரண்டத் தோற்றம் 

பரிபாடலின் இரண்டாவது பாடலின் முதலில் பதினைந்து அடிகள் 

பேரண்டம் மற்றும் உலகத் தோற்றத்தை மிக விரிவாக விவரிக்கின்றன. 

பாடலின் முதலிரு அடிகள் முழுமையாகக் கிடைக்கவில்லை இருப்பினும் 

பரிமேலழகர் உரையால் பொருளைப் புரிந்து கொள்ளமுடியும்.


தொன்முறை யியற்கையின் மதியொ... மரபிற்றாகப் பசும்பொன் உலகமும் 

மண்ணும் பாழ்பட கருவளர வானத்து இசையில் தோன்றி உருவறி வாரா 

ஒன்றன் ஊழியும் உந்துவளி கிளர்ந்த ஊழ்ஊழ் ஊழியும் செந்தீச் சுடரிய 

ஊழியும் அவையிற்று தண்பெயல் மையில்

என்று பாடுகிறார்.

 

வீட்டினுள் வெயில் விழுகிறது. அந்த வெயிலை நுணுகி 

காண்போமேயானால் சிறு சிறு தூசுகள் மிதப்பதைக் காணலாம். அந்தத் 

தூசுகள் போலப் பால்விதிகள் மிதக்கின்றன என்கிறார் மணிவாசகப் 

பெருமான் பழந்தமிழர் வெளிப்படுத்திய வானியல் கருத்துகள் பலவும் 

இன்றைய வானியலார் கருத்துடன் ஒத்துப்போகின்றன என்பதற்குச் 

சான்றாய்ப் பரிபாடல் முதலான பாடல்கள் விளங்குகின்றன என்று 

தெளியலாம்.

பெருவெடிப்புக் கொள்கையைப் பற்றிய இந்தக் கோட்பாட்டினைத் 

தெளிவுபடுத்தி முதன் முதலாக விளக்கியவர் கீரந்தையார் என்னும் சங்கப் 

புலவரே ஆவார்.

 

பழந்தமிழ் இலக்கியங்களில் சோதிடக் குறிப்புகள

பழந்தமிழ் இலக்கியங்களில் சோதிடக் குறிப்புகள் உள்ளன. பழந்தமிழர்கள் 

சோதிடத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாக

குறிப்புகள் உள்ளன.

சோதிடம் என்னும் சொல் வட  சொல்லைத்  தமிழர்கள் கணி என்னும் 

சொல்லால் சோதிடத்தைக் குறித்தனர். சோதிடப் பலன்கள் 

சொல்பவர்களைக் கணியர் என்றழைத்தனர். கணியன் பூங்குன்றனார் 

என்றொரு சங்கப் புலவர் ஒருவரும் இருந்தமை இதற்குச் சான்றாகும் . 

தொல்காப்பியரும் கணியர்களை அறிவர் என்று அழைத்தார் . திருமணம் 

முதலான நல்ல நிகழ்வுகளை நாள் நேரம் பாந்ந்துப் பழந்தமிழர் 

செய்துள்ளனர் என்பதற்குச் சங்க இலக்கியங்களில்  அகநானூற்றில் 

சான்றுகள் உள்ளன. நல்ல நேரத்தை ஓரை என்றழைத்தனர். வெள்ளி மீன் 

தெற்குப் பக்கத்தில் எழுந்தால் மழைப் பொழிவு இருக்காது என்பதும் 

பண்டைத் தமிழர் நம்பிக்கை ஆகும் . 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்