நீர் மேலாண்மை- சங்க இலக்கியத்தில் நீர் மேலாண்மை

 

                                                                 நீர் மேலாண்மை

ஐம்பெரும் பூதங்களில் நீரும் ஒன்று . ஐம்பெரும் பூதங்களும் கலந்த மயக்கமே உலகம் என்பர்.அத்தகைய நீரினைச் சங்கதமிழர் எவ்வாறு தங்கள் வாழ்வில் கையாண்டனர் , முக்கியத்துவம் கொடுத்தனர் என்பது சிந்திக்கத் தகுந்தது. 

நீரும் திருக்குறளும்

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்கள் இயக்கத்திற்கும் நீரே

முதன்மை ஆதாரமாகும். இதனையே, 

நீர்இன் றமையாது உலகுஎனின் யார்யார்க்கும்

வான்இன் றமையா தொழுக்கு (குறள். 20)  என்று கூறுகிறார். நீரின்

இன்றியமையாமையை வான்சிறப்பு என்ற அதிகாரம் வழியாக

உலகிற்கு  எடுத்துரைக்கின்றார்.   

நீரும் சொர்க்கமும்

சிறுபஞ்ச மூலம் யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று கூறுகிறது.

குளத்தைத் தோண்டி , மரக்காவை நட்டு, வழி சீத்துத் திருத்தி, வயலை

யுண்டாக்கி , கிணற்றோடு  சொல்லப்பட்ட இவற்றை மிகுதிபடச்

செய்தவன் சுவர்க்கத்திற்குச் செல்லுவான் .

குளம் தொட்டு காவு பதித்து வழி சீத்து உழம்தொட்டு

உழுவயல் ஆக்கி வளம்தொட்டு பாகுபடும் கிணற்றோடு

என்று இவை பார்படுத்தால் சொர்க்கம் இனிது என்று சிறுபஞ்சமூலம்

கூறுகிறது.

மடை

மடை திறந்த வெள்ளம் போல என்ற பழமொழி ஒன்று உண்டு. மடை என்பது நீரினை சேமித்து வைத்து , தேவைப்படும்பொழுது அதனைப் பயன்படுத்துவதற்குரிய நீர்த்தேக்க நிலையாகும். இத்தகைய  நீர் சேகரிக்கும் மடை ஒரு நாட்டில் இல்லையெனில், அந்நாட்டின் இயற்கை வளம் அழிந்துவிடும் . இதனை  நீர்பால்

மடையின்றி நீள்நெய்தல் வாடும் என்கிறது நான்மணிக்கடிகை.

நீர் -வானம்பாடி

நீர் இல்லையெனில் மனிதர்களோடு ஏனைய உயிரினங்களும் அழிந்துவிடும்.   இதனை நீர் இடும்பை புள்ளினுள் ஓங்கல் அறியும் (நான்மணிக்கடிகை 97)  என்று பாடியுள்ளனர். திருவள்ளுவர் கூறும் கீழ்க்கண்ட திருக்குறளும் இங்கு ஒப்பு நோக்குத்தக்கது.

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே

பசும்புல் தாலைகாண்ப தரிது.

என்கிறார் திருவள்ளுவர்.

மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்:

இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்

பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப

மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்

(காடுகாண் காதை. 27-29)

முறையாகப் பெய்யும் மழை நீரினை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றை தக்கமுறையில் பயன்படுத்தி நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் மழை பிணித்து ஆண்ட மன்னவன் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது .

மழைநீரைச் சேமித்து வைத்தல்

மழைநீரைச் சேமித்து வைப்பதற்கு   ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாயக் கடமை. இதனைப்   புறநானூற்றுப் பாடலில் புலவர் குடபுலவியனார், நெடுஞ்செழியனைப் பாடுகின்றார்.

 

நிலன் நெறிமருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோரம்ம இவண்தட் டோரே தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.

அதாவது நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ  அங்கெல்லாம் நீர்நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே என்றென்றும் ; இவ்வுலகில் புகழ்பெற்று அழியாத விளங்குவர் என்கிறார்.

குளத்தின் வடிவம்

நீரைத்  தேக்கி வைத்துப் பயன்படுத்த ஏரிகள், குளங்கள் வெட்டுவிக்க வேண்டும் எனில் அதற்குத் தகுந்த நீர்நிலைகள் வேண்டும். அவைகள் அவை எந்த வடிவில் அமைந்தால் நல்லது என்ற அறிவியல் உண்மையை புறநானூற்றுப் பாடலில் கபிலர் கூறுகிறார் .

 எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத் தெண்ணீர்ச் சிறுகுளம்  

 கீள்வது எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்கவேண்டும் என்றும்  பாடுகின்றார்.

குளத்தின் வாய்

நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் எதுவும் இல்லை என்பதை

 

வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்

தாய்முலை யுண்ணாக் குழவியும்

சேய்மரபில் கல்விமாண் பில்லாத மாந்தரும்

இம்மூவர் நல்குரவு சேரப்பட் டார். (84)

 

என்று தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எவ்வாறு எதிலும் சிறக்க முடியாதோ அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிடுகின்றார்.

சுருங்கைச் சிறுவழி

சுருங்கை என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். பெரிய ஏரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு பல நூறு ஆண்டுகளுக்குப் பயன்தரும் .  

குளங்களிலும் ஏரிகளிலும், இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு ஆகும் .

பெருங்குள சுருங்கைச் சிறுவழி மருங்கில் இரும்பெரு நீத்தம் புகுவது போல அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம் உளமலி உவகையோடு உயிர்கொளப் புகூம். (79-82)

குமிழித்தூம்பு

குளங்களிலும் ஏரிகளிலும், இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு ஆகும் . இந்த மதகு அமைப்பே குமிழித்தூம்பு என்பதாகும். பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்த குமிழித்தூம்பு அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான கண்டுபிடிப்பாகும். . நீர்  வெளியேறுவதற்கான துளையையும், வண்டல் படிந்த சேறு வெளியேறுவதற்காக  பக்கவாட்டில் சேறோடித்துளை என்ற மூன்று சிறிய துளைகளையும் அமைப்பை உருவாக்கினார். தூர வார வேண்டிய அவசியம் இன்றி இவ்வழியில் சேரறானது வெளியேறும் .

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்