நாட்டுச் சருக்கம் - சுரமை நாட்டின் சிறப்பு -சூளாமணி- விளக்கம்

 

          நாட்டுச் சருக்கம்  - சுரமை நாட்டின் சிறப்பு

 

மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர்

 

இஞ்சிசூழ் அணி நகர் இருக்கை நாடது

 

விஞ்சைநீள் உலகுடன் விழாக் கொண்டன்னது

 

துஞ்சுநீள் நிதியது சுரைமை என்பவே.

 

பொருள்:

 

மேகங்களால் சூழப் பெற்ற அரிய மணிகளை உடைய கோடிக்குன்றம் 

என்னும் மலையைத்  தன் கைகளால் தூக்கிய திருமாலின் அவதாரமாகக் 

கருதப்படுபவன்  திவிட்டன். அவன் அரசு வீற்றிருக்கின்ற, மதில்கள் சூழ்ந்த 

அழகிய போதனம் என்னும் நகரம் சுரமை நாட்டில் உள்ளது. அது தேவர் 

உலகத்தைக் காட்டிலும் செல்வவளத்தால் சிறப்புடைய நாடாகக் 

காட்சியளிக்கின்றது.


 

சொன்னநீர் வளமைத் தாய சுரமை நாட்டகணி சார்ந்து

 

மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட

 

பொன்னவிர் புரிசை வேலிப்போதன மென்ப துண்டோர்

 

நன்னகர் நாகலோக நகுவதொத் தினிய தொன்றே.

 

பொருள் :

நீர் வளமை உடைய சுரமை நாட்டின் நடுவில் அமைந்துள்ளது போதன 

மாநகரம். அந்நாட்டு அரசன் வீற்றிருந்து வாழ்வதற்கு ஏற்ற இடமாக, சிற்ப 

நூல் வல்லவர்களால் அமைக்கப்பட்ட, அழகு விளங்குகின்ற மதிலினால் 

சூழப்பட்டது அந்த ஊர் . தேவருலகத்தை இகழ்ந்து நகைப்பதைப் போன்ற 

சிறப்புகளை உடையது.

 

 

மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம்

 

திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா

 

வரிமருவிய மதுகரம்முண மணம் விரிவனநாகம்

 

பொரிவிரிவன புதுமலரென புன் குதிர்வன புறனே

 

பொருள் :

 

இனிமைய நுறுமணமுடைய பூக்களை உடைய  வகுள மரங்களில் தேன் 

பெருகியுள்ளது . தேன் போன்ற மா மரங்கள் அழகு பொருந்திய நல்ல 

நிழலையும் செந்நிறமான தளிர்களையும்  உடையனவாகக் 

காணப்படுகின்றன. சுரபுன்னை மரங்கள் கோடுகள் பொருந்தியதாய் 

வண்டுகள் உண்ணும்  படி  மணம் பொருந்திய தேன் பெருக 

அமைந்துள்ளன. புன்னை மரங்கள் நெற்பொரியை போன்ற அப்போது 

மலர்ந்த மலர்களைக் கொண்டு விளங்குகின்றன. அம்மலர்கள் உதிரப் 

பெற்றுள்ள அழகுடைய சோலை காணப்பட்டது.          

 

செங்கண் மால் சிங்கம்வென்று செழுமலர்த் திலகக் கண்ணி

 

திங்கண்வாள் வண்ணனோடுந் திருநகர்  பெயர்ந்த பின்னை

 

அங்கண் மாற்குரிய நங்கையரும் பெறல் அவட்குத்  தாதை

 

வெங்கண் மால்களிறன் னான்தன்திறம் இனிவிளம்பலுற்றேன்

 

பொருள்:

 

சிவந்த கண்களையுடைய திருமாலாகிய திவிட்டன் சிங்கத்தைக் 

கொன்றழித்தான் .பின்  செழித்த மலரால் ஆன தலை மாலையையுடைய 

நிலவு போன்ற  வெண்மையான நிறம் உடைய பலராமனின் 

அவதாரமென்று எண்ணப்படுகின்ற விசயனுடனே அழகிய போதன 

நகரத்தை அடைந்தான்.  அத்திவிட்டனுக்கு மண உரிமை உடையவளான 

சுயம்பிரபை என்னும் நங்கைக்குத் தந்தையாகிய பெரிய யானையின் 

வீரத்தை ஒத்த சுவலனசடி என்னும் அரசனுடைய திறத்தை இனி 

கூறுகின்றேன்.


 

தேவருமனிதர் தாமும் செறிகழல் விஞ்சையாரும்

 

மேவருந் தகைய செல்வம் விருந்து பட்டனகடோற்ற

 

மாவரசழித்த செங்கண் மணிவண்ணன் மகிழ்ந்த காலைத்

 

தாவிருஞ் செல்வமொன்று தலைவந்தது ரைக்கலுற்றேன்.

 

பொருள் :

தேவர்களும், மனிதர்களும் வீரக்கழல் கட்டிய விச்சாதாரர்களும் பெறற்கரிய 

பெருமையுடைய செல்வங்கள், புதுமை மிக்க இன்பங்களை தந்து நிற்க

விலங்கின் வேந்தனாகிய அரிமாவை பிளந்து கொன்ற சிவந்த 

கண்ணையுடைய திவிட்டன், அவ் இன்பங்களை நுகர்ந்து 

மகிழ்ந்திருக்கும்போது, குற்றமற்ற பெரும் செல்வம் ஒன்று திவிட்டனுக்கு 

இனிது வந்து எய்தியதை உரைக்கத் தொடங்குகின்றேன்.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்