நின்ற சொல்லர் நீடுதோன்று இனியர் - நற்றிணை - பாடல் - விளக்கம்

 

நின்ற சொல்லர்  நீடுதோன்று இனியர் - நற்றிணை - பாடல் - விளக்கம்

புலவர் : கபிலர்

திணை : குறிஞ்சி

துறை  : பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது

கூற்று விளக்கம் – பொருள் ஈட்டுதற் கரணமாகத் தலைவன் தலைவியை 

விட்டுப் பிரிய எண்ணியதைத் தோழி அறிந்து, தலைவியிடம் கூற, தலைவி 

“தலைவன் அங்ஙனம் என்னை விட்டுப் பிரிய மாட்டார்” எனத் 

தலைவனைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

பாடல்

நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;

என்றும் என் தோள் பிரிபு அறியலரே'

தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,

புரைய மன்ற, புரையோர் கேண்மை;

நீர் இன்று அமையா உலகம் போலத்

தம் இன்று அமையா நம் நயந்தருளி,

நறு நுதல் பசத்தல் அஞ்சிச்

சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

பொருள் :

தோழீ ! நம் காதலர் சொன்ன சொல்லில் இருந்து  தவறாத வாய்மையை 

உடையவர்.

நெடிதாகத் தோன்றுகின்ற இனிமையை உடையவர்.

எப்பொழுதும் என் தோள்களைப் பிரியக் கூடிய குணத்தை கொண்டவர் 

இல்லை .

அத்தகைய உயர்ந்தவரான தலைவனின்  நட்பானது தாமரையின் குளிர்ந்த 

தேனினையும் உயர்ந்த  சந்தனத்தின் தேனினையும் குடித்த தேனியானது

அந்தச் சந்தன மரத்தில் கட்டி வைத்த இனிய தேன் போலத் திண்ணமானது.

நீர் இன்றி அமையாத இந்த உலகத்தைப் போல நான் அவரின்றி இருக்க 

இயலாது என்பதை அறிந்தவர் .

மேலும் அவரைப் பிரிதலால் என் நெற்றியில் ஏற்படும் பசலை நோய்க்கு 

அஞ்சியும்  என்னை விட்டுப்  பிரிந்து செல்ல எண்ண மாட்டார்  

என்கிறாள்  தலைவி .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்