பாரதிதாசன் – சிறுத்தையே வெளியில் வா - பாடல் விளக்கம் - பொருள்
பாரதிதாசன் – சிறுத்தையே வெளியில் வா
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்க திராவிட நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!
பொருள் :
பூட்டப்பட்டிருந்த இரும்புக் கூட்டின் கதவானது திறந்து விடப்பட்டது. சிறுத்தையை
போன்று வீரம் கொண்ட இளைஞனே வெளியே வா.
எலி போல் உன்னை சிறுமையாக யாரெல்லாம் இகழ்ந்தார்களோ அவர்கள்
நடுங்கும் படியாக புலிக்கு ஒத்த வீரத்தினை உடையவனாக செயல்பட்டு உன்
திறமையை காட்ட புறப்பட வேண்டும் . பகல் நேரத்தை கூட நல் இரவாக
நம்பிக்கொண்டு இருந்தாய் இவ்வளவு நாள் . சிம்புட் பறவையை போல சிறகை
விரித்து வலிமை கொண்டு எழுந்து வா!
சிங்கத்தை ஒத்த வீரமுடைய இளைஞனே, சிங்கம் போல் முகத்தைத் திருப்பி
கண்களை திறந்து பார். நாம் நாட்டில் இழிவான கழுதையின் ஆட்சி நடக்கிறது.
கைகளில் ஒன்றும் இலாமல் நம் நாட்டிற்கு வந்த கயவர்கள் நம்மிடையே
பொய்யான கருத்துக்களை பரப்புகின்றனர்.நாம் சிந்தனைத் திறனை மழுங்கச்
செய்து தமிழுக்கு விலங்கு இட்டு நாம் நாட்டை அவர்கள் கவர்ந்து கொண்டனர்.
அதோடு மட்டும்இன்றி நாம் உரிமையை அவர்களது உரிமை என்று கூறுகிறார்கள்.
வழி வழியாக நம்மிடையே இருந்த வீரம் எங்கே போனது. உன்னுடைய மொழிப்
பற்று எங்கே போனது. இனியாவது விழிப்புடன் செயல் படு . புகழ்ச்சி தான் நாம்
ஆயுதம் , இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்று இந்த உலகத்தை ஆண்ட தமிழ்
மரபு நம்முடையது . இளைஞரகளோடு சேர்ந்து உன் வலிமையைக் காட்டுபகைவர்களை
அழிக்கவும் தமிழுக்கு விடுதலை வாங்கவும் மொழிக்கு புதுமை செய்யவும் புறப்படு என்று
இளைய சமுதாயத்தை வாழ்த்திக் கூறுகிறார்
கருத்துகள்
கருத்துரையிடுக