உடல் நலம் பேணல் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல் - விளக்கம்

 

  உடல் நலம் பேணல் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

 

 

உடலின் உறுதி உடையவரே

 

உலகின் இன்பம் உடையவராம்

 

இடமும் பொருளும் நோயாளிக்கு

 

இனிய வாழ்வு தந்திடுமோ?

 

சுத்த முள்ள இடமெங்கும்

 

சுகமும் உண்டு நீ அதனை

 

நித்தம் நித்தம் பேணுவையேல்

 

நீண்ட ஆயுள் பெறுவாயே!

 

காலை மாலை உலாவிநிதம்

 

காற்று வாங்கி வருவோரின்

 

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்

 

காலன் ஓடிப் போவானே.

 

ஆளும் அரசன் ஆனாலும்

 

ஆகும் வேலை செய்வானேல்

 

நாளும் நாளும் பண்டிதர்கை

 

நாடி பார்க்க வேண்டாமே.

 

கூழையே நீ குடித்தாலும்

 

குளித்த பிறகு குடி அப்பா!

 

ஏழையே நீ ஆனாலும்

 

இரவில் நன்றாய் உறங்கப்பா!

 

மட்டுக் குணவை உண்ணாமல்

 

வாரி வாரித் தின்பாயேல்

 

திட்டு முட்டுப் பட்டிடுவாய்

 

தினமும் பாயில் விழுந்திடுவாய்.

 

தூய காற்றும் நன்னீரும்

 

சுண்டப் பசித்தபின் உணவும்

 

நோயை ஓட்டி விடும் அப்பா!

 

நூறு வயதும் தரும் அப்பா!

 

அருமை உடலின் நலமெல்லாம்

 

அடையும் வழிகள் அறிவாயே!

 

வருமுன் நோயைக் காப்பாயே

 

வையம் புகழவாழ்வாயே.

 

பொருள்

 

 

எவ்விதமான நோயும் தன்னை அண்டாதவாறு உடலை உறுதியாக வைத்து இருப்பவர்களே   உலகில் நிலையான இன்பத்தை அடைய முடியும் .

நோயாளியாக  இருக்கும் ஒருவன், அதிகமான நில புலன்களையும் செல்வச் செழிப்பையும் கொண்டிருந்தாலும் அந்த வாழ்க்கை அவனுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை.

நோய்கள் நம்மை தாக்காத வகையில்  வாழ வேண்டுமாயின், நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி நம்மைச் சுற்றியுள்ள இடத்தை ஒவ்வொரு நாளும் தூய்மையாக வைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டோம் என்றால்  நீண்ட ஆயுளைப் பெறலாம்.

அதிகாலையிலும், மாலைப் பொழுதிலும் தூய்மையான சற்று காலாரா நடந்து தூய்மையான காற்றைச் சுவாசித்து வரவேண்டும். அவ்வாறு நாம் செய்தோம் எனில் எமன் நம் காலைத் தொட்டு வணங்கி விட்டு போய் விடுவானாம்.   

அரசனாகவே இருந்தாலும் கூட தன்னுடைய வேலையை தானே செய்யப் பழகிக் கொண்டால், மருத்துவரின் உதவியை நாம் நாட வேண்டிய தேவை இருக்காது.

எந்த உணவாக இருந்தாலும் குளித்த பிறகே அந்த  உணவை  உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். இரவில் எவ்வித  இடையூறும் இன்றி நன்றாக உறங்க வேண்டும்.

மனதிற்கு பிடித்த உணவு  என்று எண்ணி, உணவை  அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது. அப்படி உண்டால் நோய்கள் தானாகவே நம்மை வந்தடையும்.

தூய்மையான காற்றும் சுத்தமான  நீரும், நன்கு பசித்த பின் உண்வை  உண்ணும் பழக்கமும் நோய்களை விரட்டிவிடும். நோயின்றி  நூறு வயது வரை  வாழ்கின்ற ஆரோக்கியத்தைத் தரும்.

உடலுக்கு நன்மை தருகின்ற வழிகள் அத்தனையையும் முறையாக கடைபிடித்தால் நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்துடன் இந்த உலகம் புகழும்படி  வாழலாம்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்