திருநாவுக்கரசர் - மாசில் வீணையும் மாலை மதியமும் – தேவாரம் - பொருள்

 

திருநாவுக்கரசர் - மாசில் வீணையும் மாலை மதியமும் – தேவாரம் - பொருள்


·   

பாடல் எண் : 1

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈச னெந்தை யிணையடி நீழலே.

பொருள்

இறைவனாகிய என் தந்தையின் திருவடி குற்றமற்ற வீணையின் 

இசையைப் போன்றும்  , மாலையில்  தோன்றும்  நிலவின் குளிர்ச்சியைப் 

போன்றும்  , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் 

மாட்சியைப் போன்றும்   , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் 

பொய்கையின் குளிர்ச்சியைப்  போன்றும்  இன்பம் பயப்பதாகும் .

பாடல் எண் : 2

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்

நமச்சி வாயவே நானறி விச்சையும்

நமச்சி வாயவே நாநவின் றேத்துமே

நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

பொருள் :

ஞானமும் , கல்வியும் , நானறிந்த வித்தையும் ஐந்தெழுத்து மந்திரமாகிய 

பஞ்சாட்சரமே  ; நாவானது  கூறி வழிபடுவதும் அதனையே ; நன்னெறி 

காட்டுவதும் அத்திருமந்திரமேயாகும்

பாடல் எண் : 3

ஆளா காரா ளானாரை யடைந் துய்யார்

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்

தோளா தசுரை யோதொழும் பர்செவி

வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.

பொருள் :

இறைவனுக்கு ஆளாகமாட்டார் ; அவ்வாறு ஆளாகிய மெய்யடியார்களைச் 

சார்ந்து உய்யவும் மாட்டார் . மீளா ஆளாய் மெய்ம்மையுள் நிற்கும் ஆற்றல் 

இல்லார் ; அத்தகைய இழிந்தவர் செவிகள் துளையிட்டுப் 

பயன்படுத்தவியலாத செவியோ ? அந்தோ ! வீணே இறந்து மண்ணாகி 

ஒழிவர் !

பாடல் எண் : 4

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்

சுடலை சேர்வது சொற்பிர மாணமே

கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்

உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.

பொருள்

நாணமற்றவர்களே ! துன்பம் மிக்க வாழ்வினைக் கொண்டு என்ன 

செய்வீர்கள்  ? நீர் இறுதியில் சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு 

ஆன்றோர் சொற்களே சான்று . திருப்பாற்கடலினின்றெழுந்த ஆலகால 

விடத்தை உண்ட இறைவன்  கைவிட்டால்  உங்கள் உடல் கிடந்து ஊரார் 

வெறுக்கும் பொருளாகிவிடும் .

பாடல் எண் : 5

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்

நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்

ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து

காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.

பொருள்

பூக்களைக் கையிற்கொண்டு சிவனின் பொன் போன்ற  திருவடிகளைப் 

போற்றாதவர்களும் , நாவினைக் கொண்டு இறைவன் திருநாமத்தை 

நவிலாதவர்களும் தத்தம் உடலுக்கே உணவுதேடிச் சுழன்று இறுதியில் 

காக்கைக்கே தம்மை  இரையாக்கி ஒழிவர் .


பாடல் எண் : 6

குறிக ளும்மடை யாளமுங் கோயிலும்

நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும்

அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்

பொறியீ லீர்மன மென்கொல் புகாததே.

பொருள்

விதியற்றவர்களே ! குறிகளும் , அடையாளமும் , கோயிலும் , நெறிகளும்

அவ்விறைவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் வேதங்கள் எடுத்துக் 

கூறினும் உம் மனம் அவற்றுட் புகாதது எதனால்  ?

பாடல் எண் : 7

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்

தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.

பொருள் :

தன்னை வாழ்த்துதற்கு வாயும் , தன்னை நினைக்க அறிவற்ற நெஞ்சும்

தன்னை வணங்கத் தலையும் தந்த தலைவனாகிய பெருமானை 

வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தூவித்துதிக்காமல் , வினையேன் 

நெடுங்காலம் நான் வீழ்ந்தது எதனால்?


பாடல் எண் : 8

எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்

தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்

டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்

டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.

பொருள்

எழுதிய பாவைச் சித்திரம் போன்ற அழகுடைய பெண்களை விட்டு நீங்கி 

நான் உன்னைத் தொழுது போற்றி நிற்க வேண்டும்  . என்னையும் 

ஆராய்ந்து கொண்டு உழுத சால் வழியே பின்னும் உழுவதன் பொருட்டு 

மிக்க இழிவுடைய நெஞ்சம் செய்கின்றது  

 

பாடல் எண் : 9

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்

பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு

நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.

பொருள் :

நெகிழ்ந்து நெகிழ்ந்து நினைபவர் நெஞ்சினுள்  புகுந்து நிற்கும் பொன்னார் 

சடைப் புண்ணியன் , பொய்யானவர்களின்  பூசையில்  பூவையும் நீரையும் 

கண்டு அவர்களை நாணிச் சிரிப்பான் .

பாடல் எண் : 10

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.

பொருள்

விறகில் தீப்போலவும் . பாலில் பொருந்திய நெய்போலவும் , மாமணிச் 

சோதியானாகிய இறைவன் மறைந்து நிற்கின்றான் .  உறவு என்னும் 

 கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தால் 

முன்னின்று அருள் வழங்குவான் .


 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்