நற்றிணை-நல்லந்துவனார்-யாம் செய் தொல் வினைக்கு

 

                 நற்றிணை

கூற்று:தோழி

துறை  :சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. –

பாடியவர் :நல்லந்துவனார்

திணை :குறிஞ்சி

 

யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை?

வருந்தல்; வாழி!- தோழி!- யாம் சென்று

உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர் திரைக்

கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றா அங்கு

உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்-

தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,

நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது,

கண்ணீர் அருவியாக

அழுமே, தோழி! அவர் பழம் முதிர் குன்றே.

 

பொருள் :

தோழீ ! நாம் செய்த பழவினை அங்ஙனமாயிருக்க அதனை ஆராயாது நீ 

எதன்பொருட்டு வருந்துகின்றாய் ? இவ்வாறு  வருந்தாதே ! 

நீடுவாழ்வாயாக!. இத்துன்பத்தை அவர்பால் நாம் சென்று கூறிவிட்டு 

வருவோம் என்னுடன் எழுவாயாக! பொருந்திய அலைகளையுடைய கடல் 

நீரால் விளைந்த உப்பு மழையின்கண் கரைந்தொழிதல்

போல நீ உள்ளம் உருகி வருந்துவதைக் கண்டு  நான் அஞ்சுகிறேன்.  தம் 

தலைவன் நம்மிடத்துச் செய்த கொடுமையை  நினைத்து  அவருடைய 

பழங்கள் உதிர்கின்ற குன்றுகள் நம்பாற் பெரிதும் அன்புடைமையாலே தம் 

வருத்தத்தை  அடக்கிக் கொள்ள மாட்டாமல்  தன் கண்ணீர் அருவியாகப் 

பொழிகிறது .  அவர் மட்டும் இரங்குபவர் அல்லர்;

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்