சுற்றந்தாழல் - சுற்றம் தழால் -திருக்குறள்

                                               சுற்றந்தழால் 

1.  பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள

பொருள்‌: ஒருவன்‌ வறியவனான காலத்திலும்‌ அவனுக்கும்‌ தமக்கும்‌ இருந்த பழைய உறவைப்‌ பாராட்டிப்‌ பேசும்‌ பண்புகள்‌ சுற்றத்தாரிடம்‌ உண்டு.

2.  விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்

பொருள்‌: அன்பு நீங்காத சுற்றம்‌ ஒருவனுக்குக்‌ கிடைத்தால்‌, அது மேன்மேலும்‌ வளர்ச்சி குறையாத ஆக்கம்‌ பலவற்றையும்‌ அவனுக்குக்‌ கொடுக்கும்‌.

3.  அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று

பொருள்‌: சுற்றத்தாரோடு மனம்‌ கலந்து பழகும்‌ தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல்‌ நீர்‌ நிறைந்தாற்‌ போன்றது.



4.  சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்

பொருள்‌: சுற்றத்தாரால்‌ சுற்றப்படும்படியாக அவர்களைத்‌ தழுவி அன்பாக வாழ்தல்‌ ஒருவன்‌ செல்வத்தைப்‌ பெற்றதனால்‌ பெற்ற பயனாகும்‌.



5.  கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்

பொருள்‌: கொடுத்தலும்‌ இன்சொல்‌ கூறுதலுமாகிய இரண்டும்‌ செய்ய வல்லவனானால்‌, ஒருவன்‌ தொடர்ந்த பல சுற்றத்தால்‌ சூழப்படுவான்‌.

6.  பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்

பொருள்‌: பெரிய கொடையாளியாகவும்‌ சினமற்றவனாகவும்‌ ஒருவன்‌ இருந்தால்‌ அவனைப்போல்‌ சுற்றத்தாரை உடையவர்‌ உலகத்தில்‌ யாரும்‌ இல்லை.

7.  காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள

பொருள்‌: காக்கை தனக்குக்‌ கிடைத்ததை மறைத்துவைக்காமல்‌ சுற்றத்தைக்‌ கூவி அழைத்து உண்ணும்‌; ஆக்கமும்‌ அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

8.  பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்

பொருள்‌: அரசன் எல்லாரையும் பொதுவாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால் அதை விரும்பிச்‌ சுற்றமாக வாழ்கின்றவர்‌ பலர்‌ ஆவர்‌.

9.  தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்

பொருள்‌: முன்‌ சுற்றத்தாராக இருந்து பின்‌ ஒரு காரணத்தால்‌ பிரிந்தவரின்‌ உறவு, அவ்வாறு அவர்‌ பொருந்தாமலிருந்த காரணம்‌ நீங்கியபின்‌ தானே வந்து சேரும்‌.

10.  உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
 இழைத்திருந்து எண்ணிக் கொளல்

பொருள்‌: தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின்னர்  ஒரு காரணம் பற்றித்‌ திரும்பி வந்தவனை, அரசன்‌, அவன்‌ நாடிய உதவியைச்‌ செய்து ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும்‌.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்