அகநானூறு - 86 - நல்லாவூர் கிழார் - உழுந்து தலைப்பெய்த

 

           அகநானூறு - 86 - நல்லாவூர் கிழார் - உழுந்து தலைப்பெய்த           

 

பாடியவர் - நல்லாவூர் கிழார்

 

திணை – மருதம்

 

கூற்று – தலைவன்

 

துறை -வாயில் மறத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது.

 

தலைமகைள்கூடி  இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று

 

இன்புற்றிருந்ததூஉமாம்.

 

உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை

பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்

தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி

மனை விளக்குறுத்து, மாலை தொடரி,

கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;     

கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்

கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,

உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,

பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,          

புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

வால் இழை மகளிர் நால்வர் கூடி,

''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என,

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி   

பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,

வதுவை நல் மணம் கழிந்த பின்றை,

கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,

''பேர் இற்கிழத்தி ஆக'' எனத் தமர் தர,

ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,   

கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து

ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,

முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,

அஞ்சினள் உயிர்த்தகாலை, ''யாழ நின்

நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை'' என,          

இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,

செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,

அகம் மலி உவகையள் ஆகி, முகன் இகுத்து,

ஒய்யென இறைஞ்சியோளே மாவின்

மடம் கொள் மதைஇய நோக்கின்,        

ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.

 

பொருள் :

தீய கோள்களின் தொடர்பு நீங்கிய ரோகிணி என்னும் நாளில், அழகிய 

காலை நேரத்தில், ழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த குழைந்த 

தன்மையுடைய பொங்கலொடு விருந்துணவு படைக்கப்பட்டது. பந்தற்கால் 

நட்டுப் பந்தல் போடப்பட்டது. அந்தப் பந்தலில் புதுமணல் பரப்பப்பட்டது. 

மனையில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. மாலைகள் வரிசையாக 

தொங்கவிடப்பட்டன.

நிறைகுடம் கொண்ட பெண்டிர் மணப்பெண்ணுக்கு முன்னே சென்றனர். 

புதுப்பானை ஏந்திய பெண்டிர் மணப்பெண்ணைப் பின்தொடர்ந்து வந்தனர். 

ஆரவாரத்துடன் அவர்கள் மணப்பெண்ணை அழைத்து வந்தனர்.

மகனைப் பெற்ற வரிகளை உடைய வயிறும், தாலி அணிந்தவருமான 

மகளிர் நான்கு பேர் கூடிநின்று, ஈரமான பூக்களையும், நெல்லையும் 

தலையில் போட்டு, நீர் தெளித்து வாழ்த்திச் சடங்குகளைக்  கொண்ட 

திருமணத்தை நடத்தி வைத்தனர். “கற்புநெறி வழுவாமல் வாழ்க, நல்ல பல 

பிள்ளைகளை உலகுக்கு உதவி வாழ்க, தன்னைப் பெற்ற பெற்றோரையும்

கணவனைப் பெற்ற பெற்றோரையும் விரும்பிப் பேணும் 

பிணைப்புடையவளாக வாழ்க” என்றெல்லாம் வாழ்த்தினர்.

கல்’ என்ற சிரிப்பொலியுடன் மகளிர் சிலர் புகுந்து, “மக்களுடன் பெரிய 

இல்லக் கிழத்தி ஆவாயாக என்று கூறினார்கள்” என்று கூறிவிட்டு 

என்னிடம் அவளைத் தந்தனர். நாங்கள் இருவரும் தனித்திருந்தோம். 

அவ்வேளையில், புத்தாடையை வளைத்துத் தன் உடம்பை மூடிக்கொண்டு 

அவள் ஒடுங்கிக்கொண்டிருந்தாள். அவளை ஒரு பக்கம் அணைத்தேன். பின் 

தழுவும் விருப்பத்தோடு அவள் முகத்தைத் திறந்தேன். அவள் அஞ்சினாள். 

பெருமூச்சு விட்டாள்.

உன் நெஞ்சில் இருப்பதை ஒளிக்காமல் சொல்” என்றேன். அவள் அமர்ந்து 

கொண்டே இனிமையாகப் புன்னகை பூத்தாள். நான் பின்னும் அதே 

கேள்வியைக் கேட்டேன். பெண்மானைப் போன்ற மருண்ட பார்வையும்

சீவி முடித்து ஒடுங்கிக் கிடக்கும் கூந்தலும், மாந்தளிர் போன்ற மேனியும் 

கொண்ட அவள், நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியுடன் அவள் காதுகளில் இருந்த 

செவ்விய குழையணி ஆட, விரைந்து தலைகுனிந்தாள். திடீரென என் 

காலில் விழுந்து வணங்கினாள். இருவரும் இன்பத்தில் திளைத்தோம்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்