தேம்பாவணி -வளன் சனித்த படலம்

                    தேம்பாவணி

தேம்பாவணி என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு 

மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய 

நாட்டவரான வீரமாமுனிவர் அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் 

புகழப்படுகிறது. 

தேம்பாவணியின் பொருள்

தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் 

பிரித்துத் தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை என்றும் இதற்குப் பொருள் உண்டு. 

இயேசு நாதரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு இது 

பாடப்பட்டது. சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார்.

அரங்கேற்றம்

‘தேம்பாவணி’ கி.பி. 1726 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த 

எதிர்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது. பல புலவர்களின் அடுக்கடுக்கான 

கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்த வீரமாமுனிவரிடம் தமிழ்ப் புலவர்கள்

எல்லாம் தெரியுமெனக் கூறும்; பெஸ்கி அவர்களே! வானத்தில் எத்தனை நட்சத்திரம் 

இருக்கிறது; எனக் கூற முடியுமா?” எனக்  கேட்டார்கள். பதட்டமின்றி “முப்பது மூன்று 

கோடி, முப்பதிமூன்று லட்டத்து, முப்பதிமூவாயிரத்து, முன்னூற்றிமுப்பதிமூன்று 

நட்சத்திரங்கள் சந்தேகமிருந்தால் எண்ணிப்பாருங்கள்” என்றதும், சபையில் சிரிப்பொலி 

எழும்பிப் பலர் முனிவரைப் பாராட்டினார்கள்.

“தேம்பாவணி”யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம்; பெஸ்கிப் பாதிரியாருக்கு 

ராஜரிஷி என்ற பட்டம் அளித்துச்  சிறப்பித்தது.

நூலின் அமைப்பு

தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் 12 படலமாக 36 

படலங்கள் உள்ளன. மொத்தம் 3,615 விருத்தப் பாக்கள் 90 சந்த வகைகளுடன் பாடப் 

பெற்றது தேம்பாவணி.

பிற தமிழ்க் காப்பியங்களைப் போலவே, சீரிய உலகம் மூன்றும் என மங்கலச் 

சொற்களைக்  கொண்டே தொடங்குகிறார் ஆசிரியர். இறைவனை வணங்கும் பொழுது 

கூட , மேனாடுகளில் வழங்கும் கிறித்தவ மரபுகளைச் சாராது, தமிழ் மரபையே சார்ந்து

இறைவனது பாதங்களையே முதலில் வணங்குவதையும் ( பாதாதி கேசம் ) இறைவனது 

பாதங்களை மலராகக் காண்பதையும் இங்குக் காணலாம். 

                                               வளன் செனித்த படலம்

                                ( சூசை பிறந்த செய்தியைக் கூறும் பகுதி.)

 

                    தாவீது மன்னன்

பாடல்  1

    அன்ன மா திரு நகர் அகத்து, உடற்கு உயிர்

    என்ன, மா தாவிதன் இனிதில் வீற்றிருந்து,

    ஒன்னலார் வெரு உற உவந்து பாவலர்

    சொன்ன பா நிகரும் மேல் துளங்கினான் அரோ.

     பொருள்:  பெருமை வாய்ந்த எருசலேம் திரு நகரத்தில், உடலுக்கு

உயிர் போல, பெருமை வாய்ந்த தாவிதன் இன்பமாக அரசு வீற்றிருந்தான். 

பகைவர் அச்சங்கொள்ள, பாவலர் புகழ்ந்து சொன்ன பாடலின் நிகருக்கும்

மேலாக விளங்கினான்.

     

பாடல்  2 

 அருளொடு வீங்கிய அகத்தினான்; துளி

 மருளொடு வீங்கிய மழைக் கையான்; மலர்ச்

 சுருளொடு வீங்கிய தொடையல் மார்பினான்;

 பொருளொடு வீங்கிய பொறைப் புயத்தினான்.

 பொருள்:  அவன் உயிர்களிடத்துக் கருணையால் நிறைந்த நெஞ்சம் படைத்தவன்;

துளிகளின் மிகுதியால் நிறைந்த மழைபோல் கொடுக்கும் கையை உடையவன்;

மலர்ச் சுருள்களால் நிரம்பக் கட்டிய மாலை அணிந்த மார்பு கொண்டவன்;

பொன் அணிகலன்களால் நிறைத்து மலை போல் திரண்ட புயங்களை

உடையவன்.

               

பாடல்  3 

   ஒளி தவழ் அசனியை உமிழ்ந்த வில்லினான்;

   அளி தவழ் நிழல் செயும் அருட் குடையினான்;

   வெளி தவழ் நவ மணி விழுங்கும் தேரினான்;

   களி தவழ் மதம் பொழி களிற்றின் ஆண்மையான்

     பொருள் : அவன் மின்னலின் ஒளி தவழும் இடியையே அம்பாகப் பொழிந்த

வில்லை உடையவன்; கருணை தவழும் நிழலைக் குடிகளுக்கு வழங்கும்

அருள் என்னும் குடையை உடையவன்; வெளிச்சம் தவழும் ஒன்பது வகை

மணிகளையும் விழுங்கும் தன்மையாய்ப் பதித்த தேரை உடையவன்; களிப்பு

தவழ்வதனால் மதம் பொழியும் ஆண் யானை போன்ற வீரம் படைத்தவன்.

பாடல்  4

 மொய் முனர் பின்று இலா முரண் கொடு ஏறு எனா,

 மெய் முனர் பொய் எனா வெருவு ஒன்னார் இவன்

 கை முனர் நிற்கு இலா கலங்கிப் போற்றும், போர்

 செய் முனர் செயம் செயும் சிங்க வாகையான்.

    பொருள் :  போர் முகத்தில் பின்னிடுதல் இல்லாத வலிமை கொண்டு ஆண்

சிங்கம் போல் தோன்றி, உண்மையின் முன் பொய் நிலை

கொள்ளாமைபோல் அஞ்சும் பகைவர் இவன் கை வன்மைக்குமுன் நிற்க

இயலாது கலங்கித் துதிக்கும் வகையில் போர் செய்வதற்கு முன்னரே

வெற்றிகொள்ளும் சிங்கம் தீட்டிய வெற்றிக் கொடியை உடையவன்.

     
 

பாடல்  5

  வேல் செயும் போரினால் வெலப்படான்; தனைச்

சால் செயும் தவத்தினால் வென்ற தன்மையான்;

சேல் செயும் புணரி சூழ் செகத்தில் நின்று, ஒளி

மேல் செயும் வானவர் விழைந்த பான்மையான்.

 

    பொருள்:      அவன் வேல்கொண்டு செய்யும் போரினால் எவராலும் வெல்லப்

படாதவன்.  மிகுதியாகச் செய்யும் தவத்தினால் தன்னையே வென்ற தன்மை

உடையவன்.  மீன்களைக் கொண்ட கடலால் சூழப்பட்ட மண்ணுலகில்

தான் இருப்பினும், மேலே ஒளியைப் பொழியும் வானவரும் விரும்பத்தக்க

தன்மை உடையவன்.

பாடல்  6

 

நீதி நல் முறை எலாம் நிறைந்த நீண் தவம்,

ஆதி தன் மறை இவை அனைத்தும் மேல் படர்

கோது இல் நன் உதவி செய் கொழு கொம்பு ஆகி வான்

ஏது இல் நல் முறை இவண் இசைந்த மாட்சியான்.

  பொருள்:       நல்ல நீதி முறையெல்லாம் தன்னுள் நிறைந்த நீண்ட தவமும்,

ஆதிக் கடவுளின் வேதமும் ஆகிய இவை அனைத்தும் மேலே

படர்வதற்குக் காரணமான குற்றமில்லாத நல்ல உதவியைச் செய்யும் கொழு

கொம்பு போன்றவன் . வானகத்திற்கு உரிய குறையற்ற நன்முறைகளெல்லாம்

இவ்வுலகில் அடைந்து கொண்ட மாட்சிமை உடையவன்.

பாடல் 7

கோல் நலம் கோடு இலா நிறுவிக் கூர்த்தலால்,

நூல் நலம் பொருள் நலம் அறத்தின் நுண் நலம்

தேன் நலம் இனிதினில் திளைந்து, நாடு எலாம்

மீன் நலம் பயின்ற வான் வியப்ப வாழ்ந்ததே.

பொருள்:   செங்கோலின் நலம் வழுவாத முறையில் நிறுவிச் சிறத்தலால்,

நூலால் ஆகும் கல்வி நலமும் செல்வத்தின் நலமும் அறத்தின்

நுண்மையான நலமும் தேன் போன்ற இன்ப நலமும் இனிது நிறைந்து  அவனது  நாடெல்லாம்

விண்மீன்களின் நலம் நிறைந்த வானுலகமும் வியக்குமாறு 

வாழ்ந்தது.

பாடல்  8

பகை செய்வார்க்கு இடி என, படிந்து போற்றிய

தகை செய்வார்க்கு அமுது என நாமத் தன்மையான்,

நகை செய்வார்க்கு, இளவலாய், நடத்தும் வேல் இலான்,

மிகை செய்வான்; ஆண்மையை விளம்பல நன்று அரோ

பொருள்:       தன்னோடு பகை கொள்பவருக்கு இடி போலவும், தன் கால்களில்

விழுந்து துதித்து மேன்மை செய்பவருக்கு அமுது போலவும் அச்சந்தரும்

தன்மை உடையவன்.  அத்தாவிதன் அவன் சிறுவனாய் இருந்த காலத்தில்

தன்னை இகழ முற்படுவார்க்குத் தன் கையில் போர் நடத்துவதற்கு உரிய

வேலும் இல்லாதவனாய்த் துன்பம் செய்தவன். இத்தகையவனின் வீரத்தை

எடுத்துக் கூறுதல் நன்றாம்.



கோலியாற்றின் அறைகூவல்


      பாடல்  9


மறை வழங்கிய வளம் கொள் நாட்டு இடை சவூல் ஆண்ட

முறை வழங்கிய கால், மறை பகைத்தனர், முகில் நின்று

உறை வழங்கிய ஒப்பு எனச் சர மழை வழங்கி,

பொறை வழங்கிய பிலித்தையர், போர் செய எதிர்த்தார்.

    பொருள்:      மெய் வேதம் வழங்கிய வளம் கொண்ட சூதேய நாட்டில் சவூல் என்ற 

மன்னன் ஆண்ட முறை நடந்தது. அப்போது  மலைகளில் சஞ்சரித்த பிலித்தையர்

அவ்வேதத்தைப் பகைத்தவராய், மேகம் நின்று மழை பொழிந்ததற்கு ஒப்பாக  

அம்பு மழை பொழிந்து, போர் செய்யுமாறு எதிர்த்து வந்தனர்.


 

பாடல்  10 

 வேலியால் கது விடாத் திரு நகர் எலாம் நடுங்க,

மாலியால் கதிர் வகுத்த வாள் ஏந்தினர் நாப்பண்,

ஆலியால் கரிந்து அகல் முகில் உருக்கொடு வேய்ந்த

கோலியாற்று எனும் கொடியது ஓர் இராக்கதன் எதிர்த்தான்.

பொருள்:       மதிலின் சிறப்பால் பகைவர் நுழைய விடாத எருசலேம் திருநகர்

முழுவதும் நடுங்குமாறு, சூரிய ஒளியால் கதிர் பரப்பிய வாளை ஏந்தி 

 பிலித்தையர் நின்றனர் . அவர்களின்  நடுவே, உள்ளே கொண்ட மழை நீரினால் கருநிறம்

பெற்றுப் பெருத்த மேகத்தைப் போன்ற உருவத்தைக் கொண்டு தோன்றிய

கோலியாற்று என்னும் கொடிய ஓர் அரக்கனும் எதிர்த்து நின்றான்.


பாடல்  11 

துளி சிறைச் செயும் முகில் புகும் இரு மலை சுமந்த

ஒளி சிறைச் செயும் ஒரு கரும் பருவதம் என்னா

வெளி சிறைச் செயும் வியன் இரு புயத்து மேல் சிரமே,

களி சிறைச் செயும் கதம் கொடு வெரு உறத் தோன்றும்.

 பொருள்:  மழைத் துளியை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் கருமேகத்தை சுமந்து 

கொண்டிருக்கும்  இரண்டு மலைகள் இரு புயங்களுக்கு ஒப்பாகும் . வான வெளியை மூடி 

மறைக்கும் பெரிய இரு புயங்களுக்கு மேல் அமைந்துள்ள தலையானது ஒளியை மூடி

மறைக்கும் ஒரு கரியமலைக்கு ஒப்பாகும்   .  பார்ப்போர் களிப்பையெல்லாம் அடக்கக் கூடிய 

சினத்தைக் காட்டிக்கொண்டு அச்சம் விளைவிக்கும் வகையில் தோன்றும்.

 

பாடல் 12  

 நீண்ட வாள் புடை நெருங்கியே, படர் கரு முகில் போல்,

மாண்ட தோள் வியன் வட்டமே பொறுத்து, வெஞ் சுடரைத்

தூண்டல் ஆம் எனச் சுளித்த நீள் ஈட்டி கை தாங்கி,

கீண்டு அளாவு அழல் விழிவழி கிளர்ப்ப விட்டு எதிர்ந்தான்.

 பொருள்:  நெடிய வாளை இடையின் ஒரு பக்கம் நெருங்கத் தொங்கவிட்டிருப்பான் . 

மாண்புள்ள தோள்மிது படர்ந்த கருமேகம் போல் பரந்த கேடயத்தைத்

தாங்கியிருப்பான் கதிரவனைத் தூண்டவும் இயலும் என்றவாறு சினந்து நீண்ட

ஈட்டியைக் கையில் வைத்திருப்பான் . இவ்வாறு விளங்கும் தோற்றத்துடன் 

கிழித்துக் கொண்டு பரவும் நெருப்பைக் கண்கள் வழியே கிளர்ந்து எழவிட்டு அவன் போரை 

எதிர் கொண்டான்.

   பாடல்  13 

 

பெருக்கு வீங்கிய பெரும் புனல் அலை சுருட்டு அன்ன,

எருக்கு வீங்கிய இழிவு உகு நெஞ்சு இடை அடங்காச்

செருக்கு வீங்கிய இராக்கதன் எரி எழச் சினந்து,

தருக்கு வீங்கிய சல உரை இடி என இடிப்பான்.

பொருள்: வெள்ளப் பெருக்கால் பொங்கிய பெரிய ஆற்றில் எழும் அலையின்

சுழற்சி போல, எருக்கம் பூ மாலை திரண்ட இகழ்ச்சியை உடைய   நெஞ்சில்     அடங்காத 

அகந்தை பெருகிய அரக்கன் தீப்பொறி பறக்கச் சினந்து,

ஆங்காரம் பொங்கிய கோப மொழிகளை இடிபோல் முழங்கி இடித்துக்

காட்டிச் சொல்வான்.

 

 பாடல்  14

 

''கூர்த்த போர் செயக் கூடினர்க்கு ஒருவன் வந்து எய்தி,

சீர்த்த நான் அவன் சிறந்த போர் தனித் தனித் தாக்க,

தோர்த்த பாங்கினர் தொழும்பர் என்று ஆகுவர்,'' என்னா,

ஆர்த்த ஓகையான் நகைத்து, இகழ்வு அறைந்து அறைந்து

                                      அழைப்பான்.

பொருள் : ''சிறந்த போரைச் செய்யவென்று கூடிய நமக்குள் பக்கத்திற்கு ஒருவன்

இங்கு வந்தடைய வேண்டும் . சிறப்புள்ள நானும் அவனும் சிறந்த போரைப் பக்கத்திற்கு

ஒருவனாகத் தனித்தனி நின்று தாக்குவோம் . எம்முள் தோற்றவன் பக்கத்தார்

வென்றவன் பக்கத்தார்க்கு அடிமைகள் என்று ஆகக்கடவர்,'' என்று கூறி 

ஆரவார மகிழ்ச்சியால் நகைத்து, இகழ்ச்சி சொல்லிச் சொல்லி அறைகூவி போருக்கு 

அழைப்பான். 

பாடல்  15

பெரிய குன்றமோ? பேய் அதோ? பூதமோ? ஏதோ?

உரியது ஒன்று இலா உருவினைக் கண்டு உளி வெருவி,

கரிய விண் இடி கதத்த மின் கொடு விடுத்து அன்ன

அரிய கோலியாற்று அறைந்த சொல் கேட்டனர் மருண்டார்.

பொருள்: அவ்வுருவம் ஒரு பெரிய மலையோ? பேய் எனப்படும் அது தானோ?

பூதமோ? வேறு யாதோ? இவ்வாறு, இது என்பதற்கு உரியது ஒன்றும்

இல்லாத அவ்வுருவத்தை இசுரவேலர் கண்ட போது அஞ்சினர்.  கரிய

மேகம் ஒன்று சினமுள்ள மின்னலோடு இடியை விடுத்ததுபோல கோலியாற்றுகூவினான் .  

 ஒப்பிடுவதற்கு  அரிய கோலியாற்று அறைகூவிய சொல்லைக் கேட்டபோது மயங்கினர்.

 

பாடல்  16 

 

நல் நெடும் படை நடுக்கு உறீஇ வெருவிய தன்மை

நல் நெடுங் குவடு ஒத்தனன் செருக்கு எழுக் கடுத்து,

பல் நெடும் பகல் பரமனைப் பகைப்பவும், இகழ்ந்த

சொல் நெடும் பகை தொடர்ந்தனன் எவரையும் நகைப்பான்.

பொருள்:  நல்ல நெடிய இசுரவேலர் படை நடுக்கங் கொண்டு அஞ்சிய

தன்மையால், மலையின் நெடிய சிகரம் போன்ற அவன் தன் செருக்கு

மேலும் வளர்ந்தது . அவன் சினந்து, நீண்ட பல நாட்களாக அவர் தொழும்

ஆண்டவனைப் பகைப்பான்; இகழ்ந்த சொல்லால் நெடும்பகைதொடர்ந்தான்;

எவரையுமே  நகைப்பான்.

 

 பாடல்  17

தாங்குவார் இலா, சாற்றிய உரைகள் கேட்டு எவரும்

நீங்குவார் என, நிருபனும் அயரு தன் நெஞ்சிற்கு

ஏங்குவான்: ''எவன் எதிர்ந்த அவ் அரக்கனை வென்றால்,

ஆங்கு நான் அவற்கு என் மகள் அளிக்குவேன்'' என்பான்.

 பொருள்:   அவனைத் தடுப்பவர் எவருமே இல்லாமல், அவன் சொல்லிய வீர

உரைகளைக் கேட்டு எவருமே நீங்கி விடுவாரென்று கண்டு, மன்னனும்

அயர்ந்து தன் நெஞ்சத்தில் ஏக்கம் கொண்டான்  . ''எவனேனும்

எதிர்கொண்டு வந்த அவ்வரக்கனை வெல்வானாயின், அப்பொழுதே

நான் அவனுக்கு என் மகளை மணமுடித்துக் கொடுப்பேன்'' என்று  கூறினான் .

 

பாடல்  18 

 

இன்னவாய்ப் பகல் நாற்பதும் இரிந்த பின், அண்ணர்

முன்னர் மூவரே முரண்செயப்போயினர், அவரைத்

துன்ன ஆசையால் தொடர்ந்து இள தாவிதன் எய்தி,

அன்ன யாவையும் அஞ்சினர் அறைதலும் கேட்டான்.

 பொருள்: இவ்வாறாக நாற்பது நாட்களும் கடந்து சென்றபின், இளமை வாய்ந்த

தாவிதன், முன்னர்த் தன் தமையன்மார் மூவர் போர் செய்யப்

போயிருந்தமையால், அவர்களை அணுகிக்காண ஆசையால் தொடர்ந்து

அங்கு வந்து சேர்ந்தான் .  அங்கு நடந்த யாவற்றையும் அவர்கள் அச்சத்தோடு

சொல்லவும் கேட்டான்.

பாடல்  19 பாடல் 

 

கேட்ட வாசகம் கிளர் திற நெஞ்சு இடத்து எரியை

ஈட்டல் ஆம் என எழுந்து, ''உளம் நினைந்தவை ஆக்கிக்

காட்ட, வாய்மையின் கடந்த, வல் கடவுளை நகைப்ப

வேட்ட லால், விளி விழுங்கிய கயவன் ஆர்?'' என்றான்.

பொருள்: கேட்ட அவ்வார்த்தை கிளர்ந்தெழும் ஊக்கங்கொண்ட தன் நெஞ்சில்

நெருப்பைக் குவித்ததுபோல் ஆகுமென்று தாவிதன் கொதித்து எழுந்தான் . 

''சொல்லுக்கு அடங்காத தன்மையுடைய தன் உள்ளம் நினைந்தவற்றை

அவ்வாறே ஆக்கிக்காட்ட வல்ல கடவுளை இகழ்ந்து பேச விரும்பியதன்

மூலம், சாவையே விழுங்கிய அத்தீயவன் யார்?'' என்று கேட்டான் . 

 

  பாடல்  20

''கை வயத்தினால், கருத்து இடத்து உடலின் ஊங்கு ஓங்கும்

பொய் வயத்தினான் புகைந்த சொற்கு அஞ்சுவது என்னோ?

மெய் வயத்தினால் விழை செயம் ஆவதோ? கடவுள்

செய் வயத்தினால், சிறுவன் நான் வெல்லுவேன்'' என்றான்.

பொருள்: ''கையின் வலிமையினால், உடல் வலிமையினும் மேலாக உள்ளத்தில்

ஓங்கி எழும் பொய்யான வலிமையைக் கொண்டுள்ள ஒருவன் சினத்தினால்

 பேசிய சொல்லுக்கு அஞ்சுவது ஏனோ? உடலின் வலிமையினால்

மட்டும் ஒருவனுக்கு விரும்பிய வெற்றி கிட்டுவதோ? கடவுள் தரும்

வலிமையினால் சிறுவனாகிய நானுமே அவனை வெல்லுவேன்'' என்றான்.

 

பாடல்  21

 

என்றது அண்ணல் கேட்டு, ''இவன்தனைக் கொணர்மின்'' என்ற  இசைப்ப,

சென்ற அன்ன நல் சேடனை நோக்கலும், ''நீயோ

போன்ற உன்னினாய்? பொருப்பினைப் பெயர்த்து எறிந்து உவமை

வென்ற திண்மையான் வெகுளி முன் நீ எவன்!'' என்றான்.

   பொருள்:என்று தாவிதன் சொல்லியதை அரசன் கேள்வியுற்று, ''இவனை

உடனே அழைத்துக் கொண்டு வாருங்கள்'' என்றான்.  அதன்படி சென்ற

அந்த நல்ல சிறுவனைக் கண்டதும், ''நீ இறக்க எண்ணினாயோ? மலையைப்

பெயர்த்து எறிந்து, உவமை ஒன்றுமில்லாமல் வென்ற உறுதி படைத்த

அவ்வரக்கனின் சீற்றத்திற்குமுன் நீ எம்மாத்திரம்!'' என்றான்.

பாடல் 22  

ஏந்தல் ஈர் அடி இறைஞ்சிய இளவலும் அறைவான் :

''காய்ந்தது ஓர் பகை கடுத்த தன் பவம் செயின், மீட்டு

வேய்ந்தது ஓர் படை வேண்டுமோ? கடவுளைப் பகைத்து,

வாய்ந்த ஆண்மையை மறுத்தனை எவன் வெல்லான், ஐயா?''

 பொருள்: அரசனது இரண்டு அடிகளையும் வணங்கிய சிறுவனாகிய தாவிதனும்

தொடர்ந்து இவ்வாறு சொல்லுவான் : ''கடுமையான தன் பாவமே சினத்தின் 

தன்மையால்  ஒரு பகையாக அமைந்து விடுமாயின், அதுவே கொல்லும்

படை அமையுமே தவிர  , புறத்தேயிருந்து தோன்றுவதாகிய வேறொரு படையும்

வேண்டுமோ? ஐயா  என்றான் .  கடவுளைப் பகைத்து, அவனுக்கு இயல்பாக

அமைந்துள்ள ஆண்மையை மறுத்த ஒருவனை எவன்தான் வெல்ல

மாட்டான்?

பாடல்  23

''திறம் கடுத்த கொல் சிங்கமும் உளியமும் பாய்ந்து,

மறம் கருத்து அதிர் வல்லியத்து இனங்களும் எதிர்ந்து,

கறங்கு அடுத்த கால், கழுத்தினை முருக்கி நான் கொன்றேன்.

அறம் கெடுத்தவன் அவற்றினும் வலியனோ?'' என்றான்.

  பொருள்:   ''வலிமையோடு சினந்து கொல்லும் சிங்கமும் கரடியும் பாய்ந்து

வந்தும், கொடுமையோடு சினந்து முழங்கும் புலியினங்களும் எதிர்கொண்டு

வந்தும், காற்றாடி போல் சுழன்று என்னை அடுத்தபோது, அவற்றின்

கழுத்தை நெரித்து நான் கொன்றேன். அறத்தைக் கெடுத்தவனாகிய

இவ்வரக்கன் அவற்றைக் காட்டிலும் வலியவனோ?'' என்றான்.

பாடல்  24  

அரிய ஆண்மையை அதிசயித்து அரசன், ''நன்று'' என்னா,

விரி அளாவு ஒளி வேலொடு தனதுபல் கருவி

உரிய போர் செய ஒருங்கு தந்தனன். ''அவற்றொடு'' தான்,

''திரிய வாய் முறை தெரிகிலேன்'' என மறுத்து அகன்றான்.

 பொருள்: அரசன் அவனது அரிய வீரத்தை அறிந்து வியப்புற்று ''நல்லது''

என்று இசைந்தான் . உரிய போருக்கு உதவவென்று விரிந்து பரவும் ஒளி

பொருந்திய தனது வேலோடு வேறு பல கருவிகளையும் ஒருங்கே

கொடுத்தான். தாவிதனோ, ''அவற்றோடு நடந்து செல்ல அமைந்த

முறையை நான் அறிகிலேன்'' என்று மறுத்து விட்டு அகன்றான்.

பாடல்  25

தெரிந்த வாய்ந்த ஐஞ் சிலையொடு கவண் எடுத்து, எவரும்

இரிந்த பாலனை நோக்கி உள் அதிசயித்து இரங்க,

விரிந்த ஆசையால் வேதியர் ஆசியைக் கூற,

பிரிந்த கால் ஒலி பெருக ஆங்கு அனைவரும் ஆர்த்தார்.

 பொருள் :  தானே தெரிந்தெடுத்த வாய்ப்பான ஐந்து கற்களோடு கவணையும்

கையில் எடுத்துக் கொண்டு சென்றான். அங்கிருந்து நீங்கிய சிறுவனை

நோக்கி யாவரும் மனத்துள் வியந்து இரங்கினர்.  குருக்கள் வெற்றி பற்றிய

விரிந்த ஆசையால் ஆசி மொழிகளைக் கூறினர். தன் பக்கத்துப்

படையணியை விட்டுத் தாவிதன் தனியே பிரிந்து சென்ற போது அங்கு

இசுரவேலர் அனைவரும் ஒலி பெருக ஆரவாரம் செய்தனர்.

                     கோலியாற்று வீழ்ச்சி

 பாடல்  26

ஆர்த்த ஓதை கேட்டு, அரக்கன், இன்று அமர்க்கு எதிர் வருகப்

பார்த்த பாலனைப் பழித்து எழுந்து, யாவரும் அஞ்சக்

கூர்த்த வேலொடு குறுக வந்து, அகல் கரு முகிலின்

பேர்த்த கோடை நாள் பேர் இடி என உரை செய்தான்:

பொருள் :   இசுரவேலர் ஆரவாரித்த ஓசையை அரக்கனாகிய கோலியாற்றுகேட்டு, இன்று 

போருக்கு எதிர் வருவதாகக் கண்ட சிறுவனைப் பழித்தவண்ணம் எழுந்து, யாவரும் 

அஞ்சுமாறு கூர்மையான வேலோடு அணுகிவந்தான் . பரந்த கருமேகத்தினின்று புறப்பட்டு 

வந்த கோடை காலத்துப்பேரிடி போல முழங்கிச் சொல்லலானான்:

பாடல் 27

"நீ, அடா, எதிர் நிற்பதோ? மதம் பொழி கரி மேல்

நாய், அடா, வினை நடத்துமோ? கதம் கொடு நானே

வாய், அடா, பிளந்து உயிர்ப்பு இட மறுகி நீ நுண் தூள்

ஆய், அடா, உலகு அப்புறத்து ஏகுவாய்!" என்றான். 

பொருள் :"அடே! நீ என் எதிரே நிற்கவுங் கூடுமோ? என்று கேட்டான் .  நாய் நின்று, மதம்

பொழியும் யானையை எதிர்த்துப் போர்வினை நடத்துமோ என்றான் . டா! அடே!

சினங்கொண்டு நான் வாய் திறந்து மூச்சு விடவும், அடே! நீ சுழன்று,

நுண்ணிய தூளாய்ப் பொடிந்து, இவ்வுலகிற்கு அப்புறமுள்ள மறுவுலகிற்கே

சென்று விடுவாய், அடா!" என்றான்.

பாடல் 28

 

"வெல் வை வேல் செயும் மிடல் அது உன் மிடல், அட! நானோ

எல்வை ஆதரவு இயற்று எதிர் இலாத் திறக் கடவுள்

வல் கையோடு உனை மாய்த்து, உடல் புட்கு இரை ஆக

ஒல் செய்வேன்" எனா, உடை கவண் சுழற்றினன் இளையோன்.

பொருள்சிறுவனாகிய தாவிதன் அவனை நோக்கி, "வெல்லும் 

தன்மையுள்ள கூர்மையான வேல் தரும் வலிமையாகிய அது ஒன்றே உன் வலிமை  அடா!. 

ஆனால் நானோ தக்க சமயத்தில் ஆதரவு தரும் ஒப்பில்லா வல்லமை கொண்டகடவுளின் 

வலிய கையின் துணை கொண்டு உன்னைக் கொல்வேன்.   கொன்று உன் உடலை விரைவில் 

பறவைகளுக்கு  இரையாகுமாறு செய்வேன்" என்று சொல்லிக்கொண்டே, தன் கையிலுள்ள 

கவணைச் சுழற்றினான்.

 

பாடல் 29  

கல்லை ஏற்றலும், கவணினைச் சுழற்றலும், அக்கல்

ஒல்லை ஓட்டலும் ஒருவரும் காண்கிலர்; இடிக்கும்

செல்லை ஒத்து அன சிலை நுதல் பாய்தலும், அன்னான்

எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும்கண்டார்   

 பொருள் : தாவிதன் கல்லைக் கவணில் ஏற்றியதையும், கவணைச் 

சுழற்றியதையும்,அக்கல்லை விரைவில் அரக்கன் மீது செலுத்தியதையும் 

ஒருவருமே கண்டு கொள்ளவில்லை. இடிக்கும் மேகம் போன்று அந்தக்கல் 

அவன் நெற்றியில் பாய்ந்ததையும், பகலவன் பாய்ந்து வர இருள் நீங்கியதுபோல்அவன் 

விழுந்ததையும் மட்டுமே எல்லோரும் கண்டனர்.

பாடல்  30

கடை யுகத்தினில் கரு முகில் உருமொடு விழும் போல்,

படை முகத்தினில் பார்பதைத்து அஞ்ச வீழ்ந்தனன் தன்

புடை அகத்தினில் புணர்ந்த வாள் உருவி, "என் தெய்வம்

உடை உரத்தினை உணர்மின்!" என்று இருஞ்சிரம் கொய்தான்

 பொருள் : யுக முடிவில் கரு மேகம் இடியோடு விழுவது போல், நிலம் 

தைத்து அஞ்சுமாறு போர்க்களத்தில் வீழ்ந்த அவ்வரக்கன் . அவ்வரக்கனது 

 இடையின் ஒரு பக்கம் பொருந்தியிருந்த வாளைத் தாவிதன் உருவி, பிலித்தையரை நோக்கி

"என்இறைவன் கொண்டுள்ள வல்லமையை இதன்மூலம் உணர்ந்து கொள்ளுங்கள்!" என்று 

கூறி, அவனது பெரிய தலையைக் கொய்தான்.

 

 பாடல்  31

கூன் நெடும் பிறை குழைந்த வாய் நிரைநிரை தோன்ற,

ஊன் நெடுந்திரை ஒழுக, ஆங்கு அனைவரும் கூச,

நீல் நெடும் பொறை நிகர் தலை தூக்கினான், ஒன்னார்

மால் நெடும் படை மருண்டு உளைந்து உளம் முறிந்து ஓட.

   பொருள் : அங்கு நின்ற இசுரவேலர், பிலித்தையர் அனைவரும் கண்டு

கூசவும்,பகைவர்தம் பெருமை கொண்ட நெடும் படை மயங்கி நொந்து மனம்முறித்து 

ஓடவும், அவ்வரக்கனின் குழைந்த வாயில் வளைந்த நெடும்பிறை போன்ற பற்கள் வரிசை 

வரிசையாகத் தோன்றவும், ஊனினின்று நெடியதிரை போல் குருதி ஒழுகவும், கரிய 

நெடிய மலை போன்ற தலையைத் தாவிதன் தூக்கிக் காட்டினான்.

பாடல் 32  

கார் முகத்து அசனி கூசக் கடுத்த அவ் அரக்கன் வென்ற

சீர் முகத்து இளவல், பின்னர் திறத்த தன் நாம வேலால்

போர் முகத்து எதிர் ஒன்று இல்லான், பொழி மறை பழித்த யாரும்

பார் முகத்து அதற்கு எஞ்ஞான்றும் பரிந்திட வகை செய்தானே 

     பொருள் : கருமேகத்தில் தோன்றும் இடியும் கூசுமாறு சினந்து வந்த

அவ்வரக்கனைக் கொன்று வென்ற சிறப்பைக் கொண்டுள்ள அச் சிறுவன்,

பிற்காலத்தில் திறம் படைத்த, அச்சம் தரும் தன் வேலால் போர்க் களத்தில்

தனக்கு நிகர் ஒன்றும் இல்லாதவனாய் விளங்கி, நலமெல்லாம் பொழியும்

திருமறையை முன் பழித்த யாவரும் உலகத்தில் அதற்கு எந்நாளும் அன்பு

செலுத்த வகை செய்தான்.

 

பாடல்  33

கொய்த வாள் முடி திரண்ட குப்பைகள் ஏறி, வெய்யில்

செய்த வாள் முடியைச் சூடி, சிறந்த ஆசனத்தில் ஓங்கி,

பெய்தவான் ஒளியோடு ஆய்ந்த பெருந் தயை பிலிற்றும் செங்கோல்

எய்த வான் இறையோன் ஆண்மை எய்தியே, அரசன்  ஆனான்.

பொருள் :  வானுலகம் பெய்து தந்த ஒளியோடு ஆராய்ந்து கண்ட பேரன்பைப் பொழியும் 

செங்கோல் அடையுமாறு வானுலக ஆண்டவன் தந்த வல்லமையைத் தாவிதன் அடைந்தான் .  

தன் வாள் கொய்த பகைவரின் தலைகள் திரண்ட குவியலைக் காலால் மிதித்து ஏறி

ஒளியைச் செய்த வாளை இடையிலும் முடியைத் தலையிலும் அணிந்து, சிறந்த

அரியணையில் உயர்ந்து வீற்றிருந்து அரசன் ஆனான்.

 

பாடல் 34  

நூல் நகத் துளங்கி, கேள்வி நுண் அறிவாளர் ஒவ்வா,

வானகத்து ஒதுங்கி வாழும் வரும் பொருள் காட்டும் காட்சி,

கானகத்து ஒதுங்கி வைகும் கடித் தவத்தோடும் இன்ன

கோன் அகத்து இலங்கி, அங்கண் குடி என வதிந்த தாம் ஆல்.

   பொருள் : நூலறிவை இகழுமாறு விளங்கி, கேள்வியால் அடைந்த நுண்ணறிவு 

படைத்தவரும் ஒவ்வாத வகையில், வானுலகத்திற்கே உரியதாய் அமைந்த எதிர்காலப் 

பொருளை முன்னரே காட்டும் தெய்வக் காட்சி, காட்டில் ஒதுங்கித் தங்கும் மிக்க 

தவத்தோடும் சேர்ந்து இந்த மன்னனிடத்து விளங்கிற்று. இவை அவனுக்குக் குடிகள்போல 

அவன்பால் தங்கியிருந்தன.

பாடல்  35 

சூழ்ந்த பொன் முடியும் கோலும் துறந்து போய் அரிய கானில்

வாழ்ந்த ஒண் தவம் செய் மன்னர் வழங்கினும், அதனைக் கூட்டி

ஆழ்ந்த பல் மணியின் வீங்கும் ஆசனத்து இருக்கக் சேர்த்தல்

தாழ்ந்த பண்பு ஒழித்த இன்ன தரும கோன் அரிதின் செய்தான்.

 பொருள் :  சூடிய பொன் முடியும் செங்கோலும் துறந்து  அரிய காட்டில் போய்  வாழ்ந்து 

சிறந்த தவம் செய்த மன்னரும் இருந்தனர். ஆயினும், பதிந்த பல மணிகள் செறியும் 

அரியணையில் இருக்குமாறு அத்தத்துவத்தைக் கூட்டிச் சேர்த்தலைத் தாழ்ந்த 

குணங்களையெல்லாம் ஒழித்த இந்த நீதி மன்னன் அரிய விதமாய்ச் செய்து காட்டினான்.

 

பாடல்  36 

வேலொடு மாற்றார் வெள்ளம் வென்று வென்று அடக்கி, தன்னை

நூலொடு வெல்ல ஐந்து துன்புலன் அடக்கிக் காத்து,

கோலொடு வழாமை நீதிக் கொழுந்து சேர் கொழுகொம்பு ஆனான்,

சூலொடு வழங்கும் மாரித் துளி பழித்து அருளும் கையான்.

   பொருள் :   நீர்க் கருவோடு மேகம் வழங்கும் மழைத் துளியைப் பழித்த

தன்மையாய் இரவலர்க்கு அருளோடு கொடுக்கும் கையை உடையவனாக 

தாவிதன் விளங்கினான் . தனது வேலின் ஆற்றலால் பகைவர் வெள்ளத்தை வென்று

வென்று அடக்கினான்.  Hi பொருந்தத் தன்னை வெல்லுமாறு

நுண்ணிய ஐம்புலன்களையும் அடக்கிக் காத்து, செங்கோல் முறையினின்று

வழுவாமையால் நீதி என்னும் படர் கொடியின் கொழுந்து சேர்ந்து

தழைப்பதற்கான கொழுகொழும்பு போல் ஆனான் 

பாடல்  37

மன் அருந் தயையால் பாரில் வழங்கிய சீர்த்தி அல்லால்,

இன் அருங் குணங்கள் தம்மால் இறையவற்கு உகந்த கோமான்,

முன் அருந் தவத்தோர் கொண்ட முறைதவிர் வரங்கள் எய்தி,

துன் அரும் உயர் வீடு உள்ளோர் துணை எனப் புவியில் வாழ்ந்தான்.

      பொருள் : இனிய அரிய குணங்களின் சிறப்பால் ஆண்டவனுக்கு உகந்த

மன்னனாகிய தாவிதன், நிலைபெற்ற அரிய இரக்கத்தால் மண்ணுலகில்

அடைந்துள்ள புகழை அடைந்தான் . அது மட்டுமின்றி முற்காலத்து வாழ்ந்த அரிய

தவமுடையோர் கொண்ட அளவு முறைக்கு அடங்காத வரங்களும்

அடைந்தான்.  அடைவதற்கு அரிய உயர்ந்த மோட்ச வீட்டில்

உள்ளவர்களுக்கு நிகராகவும் இவ்வுலகில் வாழ்ந்தான்.

பாடல்  38  

ஆயினான் நடந்த தன்மை ஆண்டகை உவப்பில் ஓர் நாள்

"வீயினால் நிகர்ந்த எச்சம் இடை முறை பலவும் போய் ஓர்

சேயினால் நயப்பச் செய்வேன், சிறந்த மூஉலகில் அன்னான்

வாயினால் நவிலாக் கோன்மை வரம் பெற அளிப்பேன்" என்றான்.

   பொருள் :  இவ்வாறெல்லாம் அமைந்த அவன் வாழ்க்கை நடத்திய 

தன்மையால்ஆண்டவன் மகிழ்ச்சியோடு ஒரு நாள் அவனுக்குத் தோன்றி, "மலரை 

ஒத்த உன் சந்ததி இடையே பல தலைமுறை கழிந்தபின் ஒரு மகனால் மகிழச்

செய்வேன். சிறந்த மூன்று உலகங்களிலும் வாயினால் சொல்ல இயலாத

ஆட்சியுரிமையை அவன் பெற வரம் அளிப்பேன்" என்றான்.

            

                   வாக்குறுதியின் வழித் தோன்றல்

 

பாடல்  39

தந்த இவ் வரம் இன்னான் தன் சந்ததி முறையில் சேய் ஆய்

வந்த தற்பரனால் ஆய வளப்பம் என்றாலும், என்ற

இந்த நல் முறையால், மைந்தன் இயல்பொடு தேவன் என்பான்

அந்தரம் முதல் யாண்டும் ஆள்வதும் அரிய பாலோ?

     பொருள் : கடவுள் தாவிதனுக்குத் தந்த இந்த வரம் இவனது சந்ததி முறையில்

மகனாய் வந்த ஆண்டவனால் ஆகிய நிறைவேற்றம் என்று

சொல்லலாம்  எனினும் , முன்னால் கூறப்பட்ட இந்த நல்ல முறையில், மனித

இயல்போடு தேவனும் ஆகிய அவ்வாண்டவன் வானம் முதல் எவ்வுலகும்

ஆள்வதென்பதும் அவனுக்கு அரிய தன்மை ஆகுமோ?


பாடல்  40  

கோன்மையால் உயர்ந்த தாவின் கோத்திரத்து உதிக்கும் தெய்வ

மேன்மையால் ஒருவன் அன்றி, விபுலையில் பிறக்கும் மாக்கட்

பான்மையில் உயிர்த்த மைந்தன் பாரொடு வானும் ஆள,

நான்மையால் வழுவாச் செங்கோல் நல்க உள்ளினன் ஆம் நாதன்.

    பொருள் : ஆட்சி முறையால் உயர்ந்த தாவிதனின் குடியில் தோன்றும் தெய்வ 

மேன்மையால் அமைந்த ஒருவனுமன்றி, உலகில் இயல்பாகப் பிறக்கும்

மக்கள் தன்மை மட்டும் கொண்டு தோன்றிய மகன் ஒருவனும்

மண்ணுலகத்தோடு வானுலகத்தையும் ஆளுமாறு, நால்வகைக் குற்றங்களாலும்

வழுவாத செங்கோல் அவனுக்குக் கொடுக்கவும் ஆண்டவன் நினைத்தான்

ஆகும்.

 

பாடல் 41

உள்ளினது எல்லாம் உள்ளும் உறுதியால் ஆக்கும் வல்லோன்,

எள்ளினது எல்லாம் நீக்கும் இயல்போடு, தாவிதன் தன்

வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ உலகம் ஆள

நள்ளின வளம் கொள் ஆசை நயத்தொடு தெரிந்திட்டானே.

 பொருள் : நினைத்தலின் உறுதியால் நினைத்ததெல்லாம் ஆக்கும் வல்லமை

கொண்ட ஆண்டவன், இகழத்தக்கதெல்லாம் நீக்கும் தன் இயல்புக்கு

ஏற்றவாறு, தாவிதனின் வளமான குல முறையில் மகனாய் வந்து மூன்று

உலகங்களையும் ஆளுமாறு, செறிந்த வரங்களின் வளம் கொண்ட சூசையை

இன்பத்தோடு தெரிந்து கொண்டான்.

 

பாடல்  42  

ஏற்றிய முறையோடு, எந்தை, இயன்ற தன் வலிமைகாட்ட

போற்றிய வரம் கொடு எங்கும் பொருநனாய்த் தெரிந்த சூசை,

சாற்றிய கோத்திரத்தின் தலைமுறை வழுவாதேனும்,

மாற்றிய திரு ஒன்று இன்றி வறுமையான் பிறக்கச் செய்தான்

பொருள் : எம் தந்தையாகிய ஆண்டவன், உயர்த்திய தன்மைக்கு ஏற்பப்

போற்றத் தக்க வரங்களைக் கொண்டு எவ்வுலகிற்கும் அரசனாகத் தெரிந்து

கொண்ட சூசை, முன் கூறிய தாவிதனின் குடித் தலைமுறையில் வழுவாது

பிறந்தானெனினும், தன்னிடம் பொருந்தியுள்ள வலிமையை உலகிற்குக்

காட்டுமாறு, பரம்பரையாய்க் கைம்மாறி வரவேண்டிய செல்வம் ஒன்றுமே

இல்லாத வறுமையாளனாய் அவனைப் பிறக்கச் செய்தான்.

பாடல்  43  

பொய்ப் படும் உலக வாழ்வின் பொருட்டு இலாமிடிமையோடு,

கைப் படும் உழைப்பில் உண்டி காண வந்து உதித்த இல்லான்,

மெய்ப்படும் அறத்தின் ஆண்மை விளங்கிய முறையின், பின்னர்

ஐப் படும் விசும்பொடு எங்கும் அரசனாய் வணங்கச் செய்தான்.

 பொருள் : பொய்யான உலக வாழ்க்கையை முன்னிட்டு வேண்டிய பொருள்

இல்லாத வறுமையோடு, தன் கையால் செய்யும் உழைப்பின் மூலமே உணவு

தேடும் தன்மையாய் வந்து தோன்றிய வறியவனாகிய சூசையை, உண்மையான

புண்ணியத்தின் வீரம் அவனிடம் விளங்கிய அடிப்படையில், அழகு

பொருந்திய வானுலகத்தோடு எவ்வுலகும் அரசனாய் அவனை வணங்குமாறு

அவ்வாண்டவனே செய்தான்.

 

                          மாசு களைந்த கருப்பம்

பாடல்  44

நூல் நிலம் காட்சியால் நுனித்த கால் உணர்

மீன் நிலம் கடந்து எலாம் ஆளும் வேந்து தான்

தேனில் அம் கருணையால் தெளிந்த எல்வையில்,

கான் நிலம் தவத்தினால் கருப்பம் ஆயதே.

    பொருள் : வேத நூலுக்கு நிலைக்களனாகிய தெய்வக் காட்சியால்

ஒவ்வொன்றிற்கும் கருதிய காலத்தை உணர்ந்தவனாய், விண்மீன்

உலகத்தையும் கடந்து நின்று எல்லாவற்றையும் ஆளும் அரசனாகிய

ஆண்டவன், தேனிலும் இனிய கருணையால் தான் தெளிந்து குறித்த

சமயத்தில், தெய்வ மணத்திற்கு நிலைக்களனாய்ப் பெற்றோர் செய்த

தவத்தின் பயனாகக் கருப்பம் உண்டாகியது.

பாடல் 45

கொலை முகந்து அழன்ற வேல் கொற்றத் தாவிதன்

தலை முகந்து ஒழுகிய குலம் சகோபு அவன்

சிலை முகந்து அவிர் நுதல் தேவி நீப்பி இன்பு

அலை முகந்து உவந்து சூல் அணிந்து உள் ஓங்கினாள்.

   

 பொருள் :கொலைகளை அள்ளிக்கொண்டு கொதித்த வேலின் வெற்றி

படைத்த தாவிதனைத் தலையாகக் கொண்டு தொடர்ந்துவந்த குலத்தில்

வந்தவன் சகோபு என்பவன். அவன் மனைவி வில்லின் வடிவங் கொண்டு

ஒளிரும் நெற்றியை உடைய நீப்பி என்பவள். அவள் இன்ப அலையில்

மூழ்கி மகிழ்ந்து கருப்பம் கொண்டு உள்ளத்தில் எழுச்சி கொண்டாள்.


 

பாடல் 46  

மணி பழித்து அருங் கவின் மங்கை உள் உவந்து,

அணி பழித்து அணிந்த நல் கருப்பம் ஆய கால்,

பிணி பழித்து உறு நயம் பெருகி மேல் எழீஇ,

பணி பழித்து ஒளி முகம் பொறித்த பான்மையே.

    பொருள் :  மணிகளைப் பழித்து அரிய அழகு கொண்ட நீப்பி என்னும் மங்கை,

உள்ளம் மகிழ்ந்து, அணிகலன்களைப் பழித்ததுபோல அணிந்த நல்ல

கருப்பம் உற்றாள். அப்பொழுது கருப்பத்தால் வரும் துன்பத்தையெல்லாம்

பழித்து மிக்க இன்பம் பெருகி மேல் எழுந்தது. அணிகலன்களைப் பழித்து

ஒளிகொண்ட அவளது முகம் சித்திரமாகத் தீட்டிய தன்மையாய் விளங்கிற்று.

பாடல்  47

தாரொடு சனித்த தேன் தன்மையோ? வளை

ஏரொடு கொண்ட முத்து இலங்கும் தன்மையோ,

நீரொடும் ஐந்து தம் பகையை நீத்து, ஒரு

சீரொடு, வேற்று இல சிறந்த சூல் அதே?

  பொருள் : நீரோடும் ஐந்து பூதங்கள் தம் பகையை நீக்கி ஒரு சீராய் 

இணைந்துவேற்றுமை இல்லாமல் சிறந்து அமைந்த அந்தக் கருப்பம்

மாலையின் மலரோடு பிறந்த தேனின் தன்மை என்ப்படும் அளவிற்க்கு ? சங்கு 

அழகோடு சூல் கொண்ட முத்து உள்ளிருந்து ஒளிரும் தன்மை என்போமோ?

பாடல்  48  

அறை வளர் மனையினுள் அரசன் புக்கு என,

இறை வளர் அன்பின் ஓர் உயிர் இயற்றி, வெண்

பிறை வளர் நலமென வளர்ந்த பீள் உள

சிறை வளர் உடலினுள் செலுத்தினான் அரோ.

 பொருள் :அறை வீடுகள் நிறைந்துள்ள ஒரு மாளிகையுள் அரசன் புகுந்தது

போல், ஆண்டவன் மிகுந்த அன்போடு ஓர் உயிரைப் படைத்து, வெண் பிறை 

வளரும் அழகுபோல் வளர்ந்த கருப்பத்தைக் கொண்டுள்ள

சிறைபோல் அமைந்த உடலினுள் செலுத்தினான்.

       

பாடல் 49  

வாய் வழி பரவிய நஞ்சின் வண்ணமே,

காய் வழி ஆதன் முன் கனிந்து அருந்திய

தீய் வழி, கரு வழி சேரும் தொல் செயிர்

ஓய் வழி பொறாது, இறை ஒழிய முன்னினான்.

     பொருள் :வாய் வழியே சென்று உடலெல்லாம் பரவிய நஞ்சினைப்போல்

விலக்கப்பட்ட கனியின் வழியாக முன் படைப்புக் காலத்தில் மனித இன

முதல்வனான ஆதன் மனம் இசைந்து அருந்திய பாவத்தின் வழியாக,

மானிடர் அனைவர்க்கும் கருப்பத்தின் வழியாக வந்து சேரும் பழைய

பாவம், திருமகனின் பாடுகளின் பயனாக ஓயும் வழி ஏற்படும் வரையில்

பொறுத்திராது, அப்பொழுதே வளனுக்கு ஒழித்துவிட ஆண்டவன்

நினைத்தான்.

 

பாடல்  50

புரப்ப ஓர் பொது முறை பொறாத தன்மையால்,

கருப்பம் ஓர் எழு மதி கடக்கும் முன் வினை

பரிப்ப ஓர் சிறப்பு அருட் பயத்தின் சூல் செயிர்

விருப்பமோடு இறையவன் விலக்கினான் அரோ.

     பொருள் :அப்பாவத்தினின்று சூசையைக் காக்க ஒரு பொது முறை 

பொறாது என்பதால், கருப்பம் ஓர் ஏழு மாதம் கடக்குமுன் அவ்வினையை

அறுத்தொழிக்கவென்று ஒரு சிறப்பான திருவருட் பயனால் ஆண்டவன்

சூலோடு அமைந்த அப்பாவத்தை விருப்பத்தோடு சூசையிடமிருந்து

நீக்கினான்.

 

பாடல் 51

தீயவை விலக்கிய சிறப்பின், தேவு அருள்

தூயவை பதி வரத் தொகையின் சூல் இடத்து

ஆயவை அறிந்திலள், அளவுஇல் உள் மகிழ்

தாய் அவள் வியப்பு உறீஇ, தளர்வு அற்று ஓங்கினாள்.

  பொருள் : கருவினைப் பாவத்தோடு தொடர்ந்த தீயவற்றை யெல்லாம் நீக்கிய

சிறப்பினோடு, தெய்வ அருளால் தூயனவாகப் பதிந்த வரங்களின்

தொகையால் தன் கருப்பத்தினுள் நிகழ்ந்தவற்றை அறியாதவளாய்

அளவில்லாது உள்ளம் மகிழ்ந்த தாயாகிய நீப்பி என்பவள் வியப்படைந்து,

தளர்வு நீங்கி எழுச்சி கொண்டாள்:

 

பாடல்  52

தேன் முகம் புதைத்த சூல் செறித்த சீர் கொடு

கான் முகம் புதைத்து அவிழ் கமலப் பூ என,

சூல் முகம் புதைத்த சீர்த் தொகை புறப்பட,

தான் முகம் புதைத்து ஒளி தயங்கும் தாய் அரோ

பொருள் : தேனைத் தன்னிடத்து மறைத்த கருப்பமாகச் செறித்த சிறப்போடு

வாசனையையும் உள்ளே புதைத்து வைத்திருந்து பின் இரண்டும் புலப்பட

விரியும் தாமரை மலர் போல, அத்தாயும் தனது கருப்பத்திடமாய்

மறைந்து கிடந்த சிறப்புகளின் மிகுதி உள்ளடங்கமாட்டாது வெளிப்படவே,

தானும் அவ்வொளி முகமெல்லாம் மூட ஒளிர்ந்து விளங்குவாள்.

பாடல் 53

சொல் ஆர் நிகர் கெட ஓர் வனப்பின் பைம் பொன் சூல் முற்றி,

அல் ஆர் இருள் கெட மீ முளைத்த திங்கள் அணி மணி போல்

எல் ஆர் முகத்து இலங்கிப் பிறந்த தோன்றல் எழில் கண்டு,

பல்லார் உடை மம்மர் கெட, தாய் இன்பப் பயன் கொண்டாள்.

  பொருள் :சொற்களில் நிறைந்த ஒப்புமையெல்லாம் கெடத் தக்கதோர் அழகோடு

பசும் பொன் போன்ற கருப்பம் முதிர்ந்து, இரவில் நிறைந்துள்ள இருள்

கெடுமாறு மேல் வானத்தில் தோன்றிய சந்திரன் கொண்ட அழகுபோல்

ஒளி நிறைந்த முகத்தோடு விளங்கிப் பிறந்த மகனின் அழகைக் கண்டு,

பலரும் கொண்டிருந்த துன்ப மயக்கமெல்லாம் கெட, தாயாகிய நீப்பி

இன்பப் பயனை அடைந்தாள்.

பாடல் 54

கண்டார் எவரும் உளத்து உவப்ப மேல் ஓர் கனி இன்பம்

கொண்டார்; அருள் பொறித்த முகத்தின் மாமை கொழித்த கதிர்

உண்டார்; தெளிவு உண்டார்: "கடவுள் தன் தாட்கு உவகை செயும்

தண் தார் இவன் ஆவான்", என்ன வாழ்த்திச் சயம் சொன்னார்.

பொருள் :  குழந்தையைக் கண்டவர் யாவரும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் 

மேலான ஓர் இன்பமும் கொண்டனர்; தெய்வ அருள் பொறிக்கப்பட்ட முகத்தின்

அழகு வீசிய கதிரை உண்டனர்; தெளிவு கொண்டனர்: "இவன் கடவுளின்

திருவடிகட்கு மகிழ்ச்சியூட்டும் குளிர்ந்த மாலை போல் ஆவான்", என்று

வாழ்த்தி வெற்றி கூறினர்.

பாடல்  55  

மாசை மிக்க நிற மணியின் சாயல் மகன் நோக்கி,

ஆசை மிக்க கனி ஈன்றாள், "கற்றோர் அருந் தொடைப்பா

ஓசை மிக்க அறத் தொகையின் பீடத்து உயர் வளர்க,

சூசை!" என்று அவனை ஏந்தி, எந்தை தொழுகின்றாள்.

  பொருள் : ஆசை மிக்க கனி போன்ற அம்மகனைப் பெற்றவள், பொன்னினும்

மிக்க நிறமும் மணியின் சாயலுமுள்ள மகனைக் கூர்ந்து நோக்கி, பின்

"சூசையே! கற்ற புலவர் இயற்றும் அரிய தொடையுறுப்புகள் கொண்ட

செய்யுளின் புகழோசையினும் மிகுந்த புண்ணியத் தொகையாகிய பீடத்தில்

உயர்ந்து வளர்வாயாக!" என்று வாழ்த்தி அவனைக் கைகளில் ஏந்தி நம்

தந்தையாகிய ஆண்டவனைத் தொழுகின்றாள்.

 

பாடல்  56  

 எல்லின் கதிர் திரட்டி, திலகம் திங்கட்கு இட்டது போல்,

வில்லின் முகத்து இன் தாய் மகனை ஏந்தி, விழைவு உற்ற

சொல்லின் முகத்து இறையோன் தாளைத் தாழ்ந்து, "இத்தோன்றல்  அறத்து

அல்லின் வேந்தன் என வளர்தற்கு ஆசி அருள்க," என்றாள்.

    பொருள் : பகலவனின் கதிரைத் திரட்டிச் சந்திரனுக்குப் பொட்டு இட்டது

போல், ஒளி பொருந்திய முகமுள்ள இனிய தாய் தன் மகனை ஏந்தி,

விருப்பங் கொண்ட சொற்களின் மூலமாக ஆண்டவன் திருவடிகளைப்

பணிந்து, "இம்மகன் புண்ணியத்தில் இரவுக்கு அரசனாகிய சந்திரன் போல்

வளர்வதற்கு ஆசி அருள்வாயாக", என வேண்டினாள்.

பாடல்  57

வீடா வான் நலம் செய் நோக்கு நோக்கி விண் இறையோன்

கோடா வரத்து ஆசி செய் வான் மேல் ஓர் குரல் தோன்றி,

"ஆடா நிலை அறத்து என் மார்பில் தேம்பா அணி ஆவான்

வாடா அருள் மகன்," என்று அம் பூ மாரி வழங்கிற்றே.  

 பொருள் : வானுலகத்து ஆண்டவன் முடியாத வானுலக நலங்களைச் செய்யும்

நோக்கத்தோடு அக்குழந்தையை நோக்கி, தவறாத வரத்தோடு ஆசி

வழங்கும் ஒரு குரல் வானத்தினின்று பிறந்து, "வாடாத அருள் கொண்ட

இம் மகன் அசையாத நிலையுள்ள அறத்தோடு என் மார்பில் வாடாத

மாலையாய் அமைவான்," என்று கூற, அழகிய மலர் மாரி பொழிந்தது

 

பாடல்  58

மை நூற்று எனக் கரும் பூங் குழலாள் வாய்ந்த மகன் நலம் கேட்டு,

எந் நூல் திறத்தினும் மேல் அடியின் வீழ்ச்சி இனிது இயற்றி,

மெய் நூல் திறத்த மறை முறையின் விள்ளா வினை எல்லாம்

கை நூல் திறத்து அறவோர் இயற்றி ஆசி கனிந்து உரைத்தார்.

பொருள் : மையினால் நூற்றது போன்ற கரிய அழகிய கூந்தலை 

உடையவளாகிய நீப்பி தனக்கு வாய்ந்த மகனின் நலத்தை மேற்கூறியவாறு 

கேட்டறிந்து, எந்த நூலின் திறமைக்கும் மேலான இறைவனின் பாதத்தில் 

விழுந்ந தொழுதலை இனிது நிறைவேற்றினாள். அதனைத் தொடர்ந்து

உண்மையான நூலின் அடிப்படையில் அமைந்த வேத முறையினின்று 

 விலகாத சடங்குச் செயல்களையெல்லாம் ஒழுக்க நூல் முறையில் தேர்ந்த 

அறவோராகிய குருக்கள் நிறைவேற்றி, ஆசி மொழி கனிந்து கூறினர். பாடல்  1

பாடல்  59  

கூம்பா அணி கணிதம் மிக்கோர் கூறு புகழ்

ஓம்பா அணி ஆக அனைத்தும் நீக்கி, "ஒருங்கு உடன் ஓர்

சாம்பா அணி ஆக இரங்கி எந்தை தான் புகழ்ந்த

தேம்பாவணியே!" என்று, அணி மிக்கு அம் பூண் சேர்த்தினரே மகற்குக்.

பொருள் :சுருங்குதல் இல்லாத அழகுள்ள அம் மகனுக்குச் சோதிடக் கணித

அறிவுமிக்கோர் கூறும் புகழெல்லாம் பேண வேண்டாத அழகென்று

விலக்கிவிட்டு, "புகழெல்லாம் ஒருங்கு கூட்டி எம் தந்தையாகிய

ஆண்டவனே இரக்கங்கொண்டு ஒப்பற்ற வாடாத மாலை என்று புகழ்ந்த

தேம்பாவணியே!" என்று புகழ்ந்து, அங்குக் கூடி நின்றோர் அக்குழந்தையின்

அழகு மிகுமாறு அழகிய அணிகலன்களைஅணிவித்தனர்.

    இறைவன் கூறிய புகழுக்குமேல் எப்புகழும் வேண்டுவதென்று என்பது

கருத்து. அதுவே சோதிடர் கூறும் புகழ் நம்பத்தக்கதன்று என்று

மறைமுகமாகக் குறித்ததும் ஆம். தெய்வக் குரலும் மானிடர் குரலும்

இணைந்து கூறிய 'தேம்பாவணி', இவ்வாறு காப்பியத் தலைவனுக்கும்

காப்பியத்திற்கும் பெயராய் அமைகின்றது.
 


பாடல் 60  

செய் வாய் வான் உடு சூழ் குழவித் திங்கட் சீர் பொருவ,

பெய் வாய்க் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்பப் பெய்து, சுடர்

வை வாய் மணி ஆழி இட்டு, பைம் பூ மலர் கிடத்தி,

"மொய் வாய்க் கடல் உலகின் திலதம்", என்பார் முகங்கண்டார்.

     பொருள் :முகம் கண்டார். செந்நிறம் பொருந்திய வானத்தில் விண்மீன்கள்

சூழ்ந்துள்ள பிறைச் சந்திரனின் சிறப்பிற்கு ஒப்பாக அக்குழந்தையின் முகம்

விளங்கக் கண்டு நின்றோர், மணிகள் உள்ளே இட்டு வைத்த சதங்கையும்

சிலம்பும் ஒலிக்குமாறு கால்களில் அணிவித்து, பதித்து வைத்த ஒளி

பொருந்திய இரத்தின மோதிரத்தை விரலில் இட்டு, பசுமையான அழகிய

மலர் மெத்தையில் கிடத்தி, "அலைகள் திரண்ட கடல் சூழ்ந்த உலகிற்கு

இவனே ஒரு திலகம் ஆவான்", என்று போற்றுவர்.

பாடல்  61  

வான் மேல் வைத்த சுடர் கிடக்கும் வண்ண வடிவு", என்பார்.

"கான் மேல் வைத்த தவம் இனி நன்று இங்கண் காட்டும்", என்பார்.

"நூல் மேல் வைத்த மறை விளக்கும் நுண் மாண் சுடர்", என்பார்.

நால் மேல் வைத்த புகழ் விள்ளார்; கொண்ட நயம் விள்ளார்.

  பொருள் :  சூழ நின்றோர் சிலர், "வானத்தின் மேல் உள்ள கதிரவன் இம்

மண்ணுலகில் வந்து கிடக்கும் அழகிய வடிவமே இக் குழந்தை", என்பர்.

வேறு சிலர், "காட்டில் பொருந்த நின்ற தவத்தை இவன் இனி நாடாகிய

இங்கே பொருந்தக் காட்டுவான்", என்பர். இன்னும் சிலர்,

"நூல்களுக்கெல்லாம் மேலாக வைக்கப்பட்டுள்ள வேதத்தை விளக்கிக்

காட்டும் நுண்ணிய மாண்புள்ள சுடர் விளக்கே இம்மகன்", என்பர்.

இவ்வாறு நான்கு வகைக்கும் மேலாக வைத்து எண்ணப்பட்ட

புகழ்ச்சிகளைச் சொல்லுதல் தவிரார்; கொண்ட இன்பத்தைச் சொல்ல

இயலாதவரும் ஆயினார்.

 

             வளன் சனித்த படலம் முற்றும்.

 

 

 

 

                                               

 


 

  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்