தினைக்கொல்லையில் - தினைக்கொல்லையில்

 

                     தெம்மாங்கு

 

தேனின் இனிமையைப் போன்று பாடல் இனிமையாக இருப்பதனால்

தேன் பாங்கு” என்பதே தெம்மாங்கு என மாறி வருகிறது என்பது

பலரின் கருத்தாகும். தென் பாங்கு எனப் பொருள் கொண்டு

தென்னகத்தின் பாங்கான பாடல் என்று கூறுவதும் உண்டு.

சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி தெம்பாங்கு, தெம்மாங்கு என

இரு சொல்லாட்சிகளையும் குறிப்பிட்டு “ தென்னகத்தில்

நாட்டுப்புறத்தார் பாடும் இசைப் பாட்டு வகை” எனக் குறிப்பிடுகின்றது

நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழகராதி தெம்மாங்கு என்பதற்கு ஒரு

வகைச் சந்தம் எனப் பொருள் தருகிறது.

நாட்டுப்புறங்களில் தனி வழியே நடக்கும் போது, வண்டி

ஓட்டும்போது, வயல் வெளிப்பணிகளின் போது என எந்தத்

சூழ்நிலையிலும் தெம்மாங்குப் பாடல் எழுலாம். ஒருவரே பாடும் மரபும்

ஒருவர் கேள்விக்கு மற்றவர் பதில் கூறும் போட்டி மரபும் ஒருவர் பாட

ஏனையோர் அதனை ஒருமித்துப் போடும் குழுமரபும் எனப் பல்வேறு

மரபுகள் இதில் உள்ளன.

 

தினைக்கொல்லையில்

 

காடுவெட்டிக் கல்பொறுக்கிக்

      கம்புசோளம் தினைவிதைத்துக்

காலைமாலை காட்டைக்காக்கத் - தங்கரத்தினமே

      கண்விழித் திருந்தாங்களாம் - பொன்னுரத்தினமே. 1

அள்ளிஅள்ளி விதைத்த

      அழகுத்தினை சாகாதடி

மொள்ளமொள்ள விதைத்த- தங்கரத்தினமே

      மொந்தத்தினை சாகாதடி - பொன்னுரத்தினமே. 2

கறுப்பானை ஓடிவரக்

      கள்ளரெல்லாம் தினைவிதைக்க

வெள்ளானை ஓடிவரத் - தங்கரத்தினமே

      வேடரெல்லாம் தினைவிதைக்கப் - பொன்னுரத்தினமே. 3

சின்னச்சின்ன வெற்றிலையாம்

      சேட்டுக்கடை மிட்டாயாம்

மார்க்கட்டு மல்லிகைப்பூ - தங்கரத்தினமே

      (உன்) கொண்டையிலே மணக்குதடி - பொன்னுரத்தினமே. 4

 

சாலையிலே ரெண்டுமரம்

      சர்க்காரு வச்சமரம்

ஓங்கி வளர்ந்தமரம் - தங்கரத்தினமே

      உனக்கேத்த தூக்குமரம் - பொன்னுரத்தினமே. 5

பாடபேதம் : மார்க்கட்டு மருக்கொழுந்தாம்.

5. சாலையிலே நெல்லிமரம்.

எல்லோரும் கட்டும்வேட்டி

      ஏழைக்கேற்ற மல்லுவேட்டி

சந்தனங் கட்டும்வேட்டி - தங்கரத்தினமே

      சரியான சரிகைவேட்டி - பொன்னுரத்தினமே. 6

ஒத்தத்தலை நாகன்வந்து

      ஒட்டக்காட்டை அழிச்சிடுத்தே

ஆராரைக் காவல்வைப்போம் - தங்கரத்தினமே

      அழகான தினைப்பயிர்க்குப் - பொன்னுரத்தினமே. 7

தெய்வானையைக் காவல்வைத்தால்

      தீஞ்சிடுமே தினைப்பயிரு

வள்ளியைக் காவல்வைத்தால் - தங்கரத்தினமே

      வனத்துக்கொரு சேதமில்லை - பொன்னுரத்தினமே. 8

மூத்தண்ணன் பொண்சாதியை

      மூணுமாசம் காவல்வைப்போம்

ஏழையண்ணன் பொண்சாதியை - தங்கரத்தினமே

      ஏழுமாசம் காவல்வைப்போம் - பொன்னுரத்தினமே. 9

சாய்ந்திருந்து கிளிவிரட்டச்

      சாய்மானமும் பொன்னாலே

உட்கார்ந்து கிளிவிரட்டத் - தங்கரத்தினமே

      முக்காலியும் பொன்னாலே - பொன்னுரத்தினமே. 10

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்