வருங்காலம் உண்டு - பட்டுக்கோட்டையார்

 

     வருங்காலம் உண்டு - பட்டுக்கோட்டையார்

 

பெயர்: கல்யாணசுந்தரம்

பெற்றோர்: அருணாச்சலனார், விசாலாட்சி

பிறப்பு: 13.4.1930

இறப்பு: 8.10.1959

மனைவி: கௌரவாம்பாள்

இவர் இயற்றி வந்த கருத்துச்செறிவும் கற்பனை உரமும் படைத்த பல

பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1954ஆம் ஆண்டு

படித்தபெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத்

துறையில் அழுத்தமானமுத்திரை பதித்தார்.விவசாய சங்கத்திலும்

பொதுவுடைமைக் கட்சியிலும் ஈடுபாடு கொண்டவர்.தஞ்சையைச் சேர்ந்த

வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் அகியோருடன்

விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்த்தார்.

தனது 29 ஆண்டு கால வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத்

தொழிலாளர், நாடக நடிகர் என 17 தொழிகளில் ஈடுபட்டவர். பாடல்

எழுதும் கலையைப் புதுச்சேரி சென்று புரட்சிக்கவி பாரதிதாசனிடம்

உதவியாளராக சேர்ந்து கற்றுக் கொண்டார். அவரது நினைவைப் போற்றும்

வகையில் தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டையில் மணிமண்டபம் ஒன்றை

அமைத்துள்ளது. 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கவிஞருக்கு பாவேந்தர்

விருது வழங்கியது. மறைந்த முதலமைச்சரும் இவருது நண்பருமான

எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்து கவிஞரின் மனைவி பாவேந்தர் விருதைப்

பெற்றுக்கொண்டார். பல நூறு பாடல்களை இயற்றிய

பாட்டுக்கோட்டையாரின் பாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சென்னைப்

பல்கலைக்கழகத்தில் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் குறித்த

ஆய்வு இருக்கை இயங்கி வருகின்றன.

 

வருங்காலம் உண்டு - பட்டுக்கோட்டையார்

 

செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத்

திறமைதான் நமது செல்வம்

கையும் காலுந்தான் உதவி – கொண்ட

கடமைதான் நமக்குப் பதவி

பயிரை வளர்த்தால் பலனாகும்- அது

உயிரைக் காக்கும் உணவாகும்

வெயிலே நமக்குத் துணையாகும் – இந்த

வேர்வைகள் எல்லாம் விதையாகும்

தினம் வேலையுண்டு குல மானமுண்டு

வருங் காலமுண்டு அதை நம்பிடுவோம்

சாமிக்குத் தெரியும் பூமிக்குத் தெரியும்

ஏழைகள் நிலைமை – அந்தச்

சாமி மறந்தாலும் பூமி தந்திடும்

தகுந்த பலனை – இதைப்

பாடிப்பாடி விளையாடி ஆடிப்பல

கோடிக் கோடி முறை கும்பிடுவோம்

காயும் ஒருநாள் கனியாகும் – நம்

கனவும் ஒருநாள் நனவாகும்

காயும் கனியும் விலையாகும் – நம்

கனவும் நினைவும் நிலையாகும் – உடல்

வாடினாலும் பசி மீறினாலும் – வழி

மாறிடாமலே வாழ்ந்திடுவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்