திருமூலர் – திருமந்திரம் - அன்புடைமை

 

           திருமூலர் – திருமந்திரம்

       பதிகம் எண் :21.அன்புடைமை  (5 பாடல்கள்)

 

 

பாடல் எண் : 1

அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

 

**************************************************

பாடல் எண் : 2

பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்

மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை

துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்

பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

 

பொழிப்புரை :  ஏனை அன்பினும் சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பின் பெருமையை நான் அறிந்தவாற்றால், என் உள்ளத்தில் சிறந்திருப்பது அந்த அன்பே.

**************************************************

பாடல் எண் : 3

என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின்

முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்

பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்

தன்னன் பெனக்கே தலைநின்ற வாறே.

 

பொழிப்புரை :  உலகீர், நீவிரும் எனது அன்பு போன்ற அன்பைப் பெருக்கிச் சிவபெருமானைத் துதியுங்கள். நீவிர் முன்னே அதனைச் செய்யுங்கள்; அவன் பின்னே உங்கட்கு அவ்வன்பு பெருகுமாறு வெளிப்பட்டுத் தனது அருள் எனக்குக் கைவந்தது போல உங்கட்கும் கைவரச் செய்வான்.

************************************************

பாடல் எண் : 4

தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்

வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்

தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்

யானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.

 

பொழிப்புரை :   வாய்ப்புடைய வழியில் தேன் ஒழுகுகின்ற கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் யான் என்றும் ஒரு பெற்றியனாகும்படி எனது அன்பில் நிலை பெற்றுள்ளான். அவன் பிறர் தன்னை ஒருமுறை ஒருபெயரால் துதிப்பினும் அத்துதி பழுதுபடாதவாறு என்றேனும் ஒருநாள் வான்வழித் துணையாய் நின்றருளுவான். 

பாடல் எண் . 5 

கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே  .

பொழிப்புரை:

கொன்றை மாலையாகிய திருவடையாள மாலை யால் பிரணவம் முதலிய மந்திரப்பொருள் தானேயாகியும், யானையை உரித்தமையால் ஆணவமலத்தைப் போக்குபவன் தானேயாகியும் நிற்றலால், அன்பால் நினைவாரது நெஞ்சத் தாமரையின்கண் விளங்கு பவனும் தானேயாகிய சிவபெருமானது திருவடிகளை நானே கண்டேன்; ஏனெனில், அவை எனது அன்பிடத்தே உள்ளனவாதலால்.

**************************************************


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்