கவிஞர் இன்குலாப்- ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

 

                    கவிஞர் இன்குலாப்

இன்குலாப் (Inkulab, பிறப்பு: 1944 - இறப்பு: திசம்பர் 1, 2016) என்பவர் தமிழ்க்

கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை

எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச்

சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள்,

ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே

இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி

என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்ய அகாதமி

விருது இவர் எழுதிய காந்தள் நாட்கள் என்னும் நூலுக்கு அவரின்

மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது.

இன்குலாப்பின் இயற்பெயர் செ. கா. சீ. சாகுல் அமீது.[3] கீழக்கரை என்னும்

ஊரில் பிறந்தார். இசுலாமியச் சமூகத்தில் மிகவும் ஏழ்மை குடும்பத்தில்

பிறந்தார். இவருடைய தந்தை சித்த மருத்துவர். பள்ளிப் படிப்பைக்

கீழக்கரையில் முடித்துவிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக்

கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில் மீரா

என்னும் கவிஞர் அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார். எனவே

அவருடன் இன்குலாப்புக்கு நட்பு ஏற்பட்டது.

 

மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்துப்

பயின்றார். படிப்பை முடித்து சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில்

ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஈரோடு தமிழன்பன், நா. பாண்டுரங்கன்

போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணி புரிந்தார்.


இன்குலாப் கவிதைகள் (1972)

வெள்ளை இருட்டு (1977)

சூரியனைச் சுமப்பவர்கள் (1981 திசம்பர்)

கிழக்கும் பின்தொடரும் (1985 பிப்ரவரி)

கூக்குரல்

இன்குலாப் கவிதைகள் - தொகுதி இரண்டு

ஒவ்வொரு புல்லையும் (மேற்குறிப்பிட்ட தொகுப்புகளும் புதிய

கவிதைகளும் அடங்கியது 1999)

ஒவ்வொரு புல்லையும் - இரண்டாம் பதிப்பு (1972 முதல் 2004 வரை

எழுதிய கவிதைகளின் தொகுதி - 2004)

பொன்னிக்குருவி (2007 நவம்பர்)

புலிநகச்சுவடுகள்

காந்தள் நாட்கள் (2016) - 2017 ஆம் ஆண்டிற்கான சாகித்யா அகாதெமி

விருது பெற்ற நூல்

ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன் (2017 திசம்பர் 1 –

அனைத்துக்கவிதைகளும் அடங்கியது)

சிறுகதைத்தொகுதி

பாலையில் ஒரு சுனை

கட்டுரைத்தொகுதிகள்

யுகாக்கினி

ஆனால்

நாடக நூல்கள்

ஒளவை

மணிமேகலை

குரல்கள்

துடி

மீட்சி

இன்குலாப் நாடகங்கள் (அனைத்து நாடகங்களும் அடங்கியது)

நேர்காணல்கள்

அகிம்சையின் குரலை ஆதிக்கவாதிகள் கேட்பதில்லை

மானுடக்குரல் : இன்குலாப் நேர்காணல்கள் (அனைத்து நேர்காணல்களும்

அடங்கியது)

மொழிபெயர்ப்புகள்

'மார்க்சு முதல் மாசேதுங் வரை' - எஸ் .வி. ராஜதுரையுடன் இணைந்து

எழுதினார் 


ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்


ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

பறவைகளோடு எல்லை கடப்பேன்

பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்

எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்

நீளும் கைகளில் தோழமை தொடரும்

நீளாத கையிலும் நெஞ்சம் படரும்

எனக்கு வேண்டும் உலகம் ஓர்கடலாய்

உலகுக்கு வேண்டும் நானும் ஓர்துளியாய்

கூவும் குயிலும் கரையும் காகமும்

விரியும் எனது கிளைகளில் அடையும்

போதியின் நிழலும் சிலுவையின் பிறையும்

பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்

என்செவிகளிலே எதிரொலி கேட்கும்

கூண்டில் மோதும் சிறகுகளோடு

எனது சிறகிலும் குருதியின் கோடு!

சமயம் கடந்த மானுடம் கூடும்

சுவரில்லாத சமவெளி தோறும்

குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்

மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்.

 




 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்