கடவுள் வாழ்த்து - thirukkural - திருக்குறள்

 

                   கடவுள் வாழ்த்து -  thirukkural  - திருக்குறள்


 1.அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி-
  பகவன் முதற்றே, உலகு.

 

பொருள் : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. 

அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

 

 2.கற்றதனால் ஆய பயன் என்கொல்-வால்-அறிவன்
 நல் தாள் தொழாஅர் எனின்?.

பொருள் : தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் 

தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

 3.மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
 நிலமிசை நீடு வாழ்வார்.

பொருள் : அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை 

இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.


 4.
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
 யாண்டும் இடும்பை இல.

பொருள் : விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி 

நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

 5.இருள் சேர் இரு வினையும் சேரா, இறைவன்
 பொருள் சேர் புகழ் புரிந்தார்மாட்டு.

பொருள் : கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம்

அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

 6.பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
 நெறி நின்றார் நீடு வாழ்வார்.

பொருள் : ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய 

பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

 7.தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
 மனக் கவலை மாற்றல் அரிது.

பொருள் : தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி 

நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
 8.
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
 பிற ஆழி நீந்தல் அரிது.

பொருள் : அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி 

நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் 

கடக்க முடியாது

 9.கோள் இல் பொறியில் குணம் இலவே-எண்குணத்தான்
 தாளை வணங்காத் தலை.

பொருள் : கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய 

கடவுளின் திருவடிகளை வணங்காதவரின்  தலைகள் பயனற்றவைகளாம்

 10.பிறவிப் பெருங் கடல் நீந்துவர்; நீந்தார்,
 இறைவன் அடி சேராதார்.

பொருள் : இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய 

பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்