திருக்குறள்- நீத்தார் பெருமை - 21-30

 

 

                திருக்குறள்- நீத்தார் பெருமை - 21-30

 

21.   ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

     வேண்டும்- பனுவல் துணிவு.


பொருள் : ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் 

போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவாகும்.


22.    துறந்தார் பெருமை துணைக் கூறின், வையத்து

     இறந்தாரை எண்ணிக்கொண்டற்று.     

 

பொருள் : பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில்   

இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.


23.   இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்

      பெருமை பிறங்கிற்று, உலகு.


பொருள் : பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை 

ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.


24.   உரன் என்னும் தோட்டியான், ஓர் ஐந்தும் காப்பான்

       வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து. 



பொருள் :அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க 

வல்லவன்மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.


25.   ஐந்து அவித்தான் ஆற்றல், அகல் விசும்புளார் கோமான்

       இந்திரனே சாலும், கரி.


பொருள் : ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு

வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.


26.   செயற்கு அரிய செய்வார் பெரியர்; சிறியர்

       செயற்கு அரிய செய்கலாதார்.    


பொருள் : செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். 

செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

 

27.    சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று ஐந்தின்

     வகை தெரிவான்கட்டே-உலகு.   


பொருள் : சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் 

ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

 

28.   நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

      மறைமொழி காட்டிவிடும். 


பொருள் : பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் 

அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

 

29.   குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி

      கணம் ஏயும், காத்தல் அரிது.


பொருள் : நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறிநின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே 

சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.


30.   அந்தணர் என்போர் அறவோர்-மற்று எவ் உயிர்க்கும்

      செந் தண்மை பூண்டு ஒழுகலான்.


பொருள் : எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் 

அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்