கிள்ளைப் பத்து ஐங்குறுநூறு

 

                      கிள்ளைப்  பத்து  ஐங்குறுநூறு

                 குறிஞ்சித்திணை

281. வெள்ள வரம்பின் ஊழி போகியும்

கிள்ளை வாழிய பலவே ஒள்ளிழை

இரும்பல் கூந்தல் கொடிச்சி

பெருந்தோள் காவல் காட்டி யவ்வே.


 பொருள் :தலைவியை விரும்பும் தலைவன் கூறுகின்றான் .

வெள்ளம் என்னும் எண்ணின் அளவு ஊழிக் காலமாகக் கிளிகள்

வாழ்கின்றன. இந்தக் கிளிகள் வாழ்க. இவை விளைந்திருக்கும்

தினையைக் கவர்வதால் தானே அந்தக் கிளிகளை ஓட்டும்

பொருட்டு என் காதலி கொடிச்சி தினைப்புனம் காவலுக்கு

வந்துள்ளாள். அவளது பருத்த தோள் எனக்குக் கிடைப்பதாயிற்று.

 

282. சாரல் புறத்த பெருங்குரல் சிறுதினைப்

பேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்

சோலைச் சிறுகிளி உன்னு நாட

அரிருள் பெருகின வாரல்

கோட்டுமா வாழங்கும் காட்டக நெறியே.

 

பொருள் : மலைச்சாரலில் பருத்த கதிர்களுடன் தினை

விளைந்திருக்கிறது. அவற்றை உண்ணும் கிளிகளை என் தலைவி

கொடிச்சி ஓட்டுகிறாள். விரும்பும் கண்களோடு ஓட்டுகிறாள்.

அப்படிக் கொடிச்சி ஓட்டவேண்டும் என்று தலைவன் விருப்பத்தோடு

நினைக்கிறான். இப்படி நினைக்கும் மலைநாடனே நிறைந்த

இருளில் என் தலைவியை அடையும் பொருட்டு வரவேண்டாம்.

கொம்புகளை உடைய காட்டு யானை நடமாடும் வழி அது. துன்பம்

நேரலாம் அல்லவா?


283. வன்கண் கானவன் மென்சொல் மடமகள்

புன்புல மயக்கத்து உழுத ஏஅனல்

பைம்புறச் சிறுகிளி கடியும் நாட

பெரிய கூறி நீப்பினும் 

பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே.

 

பொருள் : . கடுமையான கண்ணோட்டம் உள்ள கானவன் புன்செய்

நிலத்தை உழுது விதைத்த தினையைக் கவர வரும் கிளியைக்

கானவன் மகள் ஓட்டுவாள்.. இத்தகைய நாட்டின் தலைவன் நீ.  

எவ்வளவு  நான் என் தலைவிக்கு எடுத்துரைத்தேன். ஆயினும்

அவளோ உன் பொய்  வலையில் விழுந்து உன்னைத் தழுவுகிறாள்.

 

284. அரிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி

குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால்

இருவை நீள்புனங் கண்டும்

பிரிதல் தேற்றாப் பேரன் பினவே.

 

பொருள் :சிவந்த வாயை உடைய பச்சைக்கிளி இரங்கத் தக்கது.

குன்றக் குரவர் தினையைக் கொய்துகொண்டு சென்றுவிட்டனர்.

எனினும் அவை கதிர் இல்லாத இருவித் தட்டையில்

அமர்ந்திருக்கின்றன. அவற்றைப் பிரிய முடியாத பேரன்பினவாக

உள்ளன.


285. பின்னிருங் கூந்தல் நன்னுதல் குறமகள்

மெல்தினை நுவணை  யுண்டு தட்டையின்

ஐவனச் சிறுகிளி கடியும் நாட

வீங்குவளை நெகிழப் பிரிதல்

யாங்குவல் லுநையோ ஈங்கிவள் துறந்தே.

 

பொருள் :குறவர் மகள் பின்னிய இருண்ட கூந்தலையும் நல்ல

அழகுயும்  கொண்டவள். தினை மாவை தின்று கொண்டே கையில்

தட்டையை வைத்துக்கொண்டு தட்டி ஓசை எழுப்பி ஐவன நெல்லில்

உள்ள கிளிகளை ஓட்டுவாள். இத்தகைய  நாட்டை உடையவன்

நீ. தலைவியின்   வளையல் நழுவும்படி பிரிவதற்கு வல்லமையை

எப்படிப் பெற்றாய்?


286.
 சிறுதினை கொய்த இருவை வெண்கால்

காய்த்த அவரைப் படுகிளி கடியும்

யாண ராகிய நன்மலை நாடன்

புகரின்று நயந்தனன் போலும்

கவரும் தோழிஎன் மாமைக் கவினே.

 

பொருள் : சிறிய தினையை அறுவடை செய்த பின்னர் நிற்கும்

தட்டையில் படர்ந்து காய்த்திருக்கும் அவரையில் கிளிகள் இரை

தேடும் வளமான நாட்டின் தலைவன் என் காதலன். அவன் என்மீது

கொண்டுள்ள ஆசை குற்றமற்றது போலும். அந்த ஆசை என் மேனி

அழகைக் கவர்ந்து சென்றுவிட்டதே!


287. நெடுவரை மிசையது குறுங்கால் வருடை

தினைபாய் கிள்ளை வெரூஉம் நாட

வல்லை மன்ற பொய்த்தல்

வல்லாய் மன்றநீ அல்லது செயலே.

 

பொருள் : உயர்ந்த மலையில் வாழும் வருடை ஆட்டைக் கண்டு  

கிளிகள் அச்சப்பட்டு  தினையைக் கவர அஞ்சும் நாட்டை

உடையவன் நீ. பொய் சொல்வதில் நீ வல்லவன். நெறி அல்லாத

செயல்களைச் செய்வதிலும் வல்லவன்.

 

 288. செய்த உதவி நன்றுதெரிந்து

யாம் எவன் செய்குவம் நெஞ்சே

மெல்லியல் கொடிச்சி காப்பப் 

பல்குரல் ஏனல் பாத்தரும் கிளியே.

 

பொருள் :

கிளிகள் நல்லது செய்தன. எனக்கு உதவி செய்தன. நெஞ்சே

அவர்களுக்கு நாம் என்ன செய்யக் கடவேம் . பல கதிர்களுடன்

தினை விளைந்திருக்கிறது. கிளி அதனைக் கிள்ளிக்கொண்டு

செல்கிறது. அதனால்தானே கொடிச்சியை,தலைவியை தினைப்புனம்

காக்க அனுப்பி வைத்துள்ளனர்?


289 . கொடிச்சி இன்குரல் கிளிசெத் தடுக்கத்துப்

பைங்குரல் ஏனல் படர்தரும் கிளியெனக்

காவலும் கடியுநர் போல்வர

மால்வரை நாட வரைந்தனை கொண்மோ.

 

பொருள் : மலையடுக்கத்தில் கிளி தினை உண்ண வரும். அந்தக்

கிளி போன்ற கொடிச்சி தினை காக்க வருவாள். இப்படிப்பட்ட மலை

நாட்டை உடையவன் நீ. இனி, இவள் தினைப்புனம் காக்க

வரமாட்டாள். நீ கொடிச்சியை – என் தலைவியை – திருமணம்

செய்து அழைத்துக்கொண்டு செல்.


290. அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனி

சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய

பூக்கமழ் கூந்தல் கொடிச்சி 

நோக்கவும் படும்அவள் ஒப்பவும் படுமே.

 

பொருள் : மன்னனின்-தலைவனினும் மிகச்

சிறந்து  விளங்குகின்றன  கிளிகள் . ஏனெனில் அவை தலைவியல்  

விரட்டவும் படுகின்றன . விரும்பி நோக்கவும் படுகின்றன . அதனால்

கிளிகள் மன்னனிற் சிறந்தன போலும்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்