புறநானூறு 182. உண்டாலம்ம இவ்வுலகம்!-கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
புறநானூறு 182. உண்டாலம்ம இவ்வுலகம்!
பாடியவர்: கடலுள் மாய்ந்த
இளம்பெருவழுதி
திணை: பொதுவியல். (எல்லாத்
திணைகளுக்கும் பொதுவான
செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.)
துறை: பொருண்மொழிக் காஞ்சி . (உயிர்க்கு
நலம் செய்யும் உறுதிப்
பொருள்களை எடுத்துக் கூறுதல்.)
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்;
பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.
பொருள் : இந்திரனுக்குரிய அமிழ்தம்
கிடைத்தாலும், அது இனிமையானது
என்று தனித்து உண்ண மாட்டர்கள்;
யாரையும் வெறுக்க மாட்டார்கள்;
சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத்
தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும்
கொடுப்பர்; பழிவரும்
என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும்
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய
சிறப்புடையவர்களாகித் தமக்காக
உழைக்காமல், பிறர்க்காக வலிய
முயற்சியுடன் உழைப்பவர்கள்
இருப்பதால்தான் இவ்வுலகம்
இயங்கிக்கொண்டிருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக