நற்றிணை - 15.முழங்கு திரை கொழீஇய

 

        நற்றிணை - 15.முழங்கு திரை கொழீஇய

பாடியவர் : அறிவுடைநம்பி

திணை : நெய்தல்

கூற்று : வரைவு நீட்டித்தவழி, தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது.

பாடல்:

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,

நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொள

ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!

பூவின் அன்ன நலம் புதிது உண்டு,

நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாமே   5

நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி,

மாசு இல் கற்பின் மடவோள் குழவி

பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு,

சேணும் எம்மொடு வந்த

நாணும் விட்டேம்; அலர்க, இவ் ஊரே!       10

 

பொருள் :

முழங்குகின்ற அலைகொணர்ந்து சேர்ப்பித்த  பெரிய எக்கர் மணலை மென்மையான

துகிலின் அசைவு போலத் தோன்றுமாறு மிகுதி படக் காற்று வீசும் ; அத்தகைய நீர்மிக்க

வலிய கடற்கரைத் தலைவனே! ; பூப்போன்ற எமது தலைவியின் நலத்தைப் புதுவதாக

நுகர்ந்த பின்னும் உன்னைச் சேர்ந்து உன்னுடையவர்களாய் ஆனோம் இல்லை . எனவே

நாங்கள் நினக்கு உடம்படுதலையுடைய எம்முள்ளத்தில் வருத்தமுற்று அவ்வருத்ததைத்  

தாங்கினோம்  . குற்றமற்ற கற்பினையுடைய அறிவற்ற ஒருத்தி தன் குழந்தையைப் பேய்

வாங்கிக்கொள்ள அவள் அதனைக் கைவிட்டாற்போல; முன்னாளின் முதற்கொண்டு

எம்முடன் வளர்ந்துவந்த நாணும் விட்டு விட்டோம் . இவ்வூரில்  இனி இதுகுறித்து  அலர்

எழுவதாக;

 

கூற்று விளக்கம்: களவின்கண் ஒழுகிய தலைவன் மணம் செய்து கொள்ளாது காலம்

தாழ்த்த அவனை நோக்கி நீ தலைவியின் நலத்தைப் உண்டனை எனினும் உன்னைச்

சேர்ந்தவர்கள் அல்லர்  ஆனோம் . அதனால் அலர் உண்டாயிற்று எங்கள் நாணமும்

அழிகின்றது எனக் கூறியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்