நற்றிணை 04 கானல் அம் சிறுகுடிக்
நற்றிணை 04
பாடியவர் :அம்மூவனார்
திணை : நெய்தல்
கூற்று : தலைவன் சிறைப் புறத்தானாகத்
தோழி அலர் அச்சம்
தோன்றச் சொல்லி வரைவு கடாயது .
பாடல்:-
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,
அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு’ எனக் கூறின்,
கொண்டும் செல்வர்கொல்- தோழி!- உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே?
பொருள் :
தோழீ , கடற்கரைச் சோலையில் உள்ள
சிறுகுடியிலிருந்து கடலின்
மேல் செல்லும் மீனவர் நீல நிறப்
புன்னை மர நிழலில் தங்குவர் .
குளிர்ந்த பெரும் பரப்பை உடைய கடலின் மேல் செல்லுதற்குரிய செவ்வி
பார்த்து ,முருக்குண்ட வலையைப் பிரித்துக் காய விடுவர் . அத்தகைய
துறையை உடைய தலைவனிடம் நீ சென்று
“நமக்குண்டாகிய பழிச்
சொல்லை அன்னை அறிந்தால் இனி இங்குத்
தங்கி களவொழுக்கத்தில்
வாழ்தல் அரிதாகும் “ என்று கூறினால் , உப்பு வணிகர் வெண்மையான
கல்லுப்பின் விலையைக் கூறி கூட்டமாகிய ஆனிரையை ஒலி எழுப்பிப்
போகச் செய்யும் வழியில் செல்லும்
வண்டிகள் மணல் பரப்பில் மடுத்து
முழங்கும் ஓசையைக் கேட்டு வயல்களில் உள்ள கருங்கால்
வெண்குருகுகள் அஞ்சுகின்ற கரிய
உப்பங்கழி மிகுந்த நெய்தல்
நிலத்திலே உள்ள தம் ஊருக்குஅழைத்துக்கொண்டு போவாரோ?
கருத்துகள்
கருத்துரையிடுக