புறநானூறு 89 இழை அணிப் பொலிந்த

 

89   இழை அணிப் பொலிந்த


பாடியவர்: அவ்வையார்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி

 

இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,

மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி!

பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என,

வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!

எறி கோல் அஞ்சா அரவின் அன்ன

சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று,

பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை

வளி பொரு தெண் கண் கேட்பின்,

'அது போர்' என்னும் என்னையும் உளனே.

திணை :   தும்பை.

துறை :  தானை மறம்.


அதியமான் நாட்டின் மீது படையெடுக்க எண்ணிய அரசன் வினாவுதலுக்குப் புலவர் ஔவையார் விடை தருகிறார். அணிகலன்களால் அழகு செய்யப்பட்டுப் பருமனாக விளங்கும் அல்குலை உடைய பெண்ணே! மை தீட்டப்பட்ட கண்ணையும், ஒளிரும் நுதல் முகத்தையும் உடைய விறலியே! ‘உன் நாட்டில் என்னை எதிர்த்துப் போரிடத் தக்க போராளிகளும் உள்ளனரோ?’ என்று வேந்தே, நீ கேட்கிறாய். அடிக்கும் கோலுக்கு அஞ்சாத பாம்பு போலச் சீறும்  மறவர்களும் உள்ளனர். ஊர் பொதுமன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போர்த்தண்ணுமையில் (போர்முரசு) காற்று மோதுவதால் உண்டாகும் சிறிய ஒலியைக் கேட்டாலே அதனைப் போர் எனக் கருதி எழும் என் தலைவனும் இருக்கிறான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்