அகநானூறு 7 முலை முகம்செய்தன கயமனார்

  

              அகநானூறு 7 முலை முகம்செய்தன கயமனார் 

பாடியவர் :கயமனார்

திணை : பாலை

கூற்று :செவிலித்தாய்

( மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று,

நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது)

 

முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின;

தலை முடிசான்ற; தண் தழை உடையை;

அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;

மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய;

காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; 5

பேதை அல்லை மேதைஅம் குறுமகள்!

பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என,

ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி,

தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை

ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி!      10

வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர்

தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள்

இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை,

அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென,

பிற்படு பூசலின் வழிவழி ஓடி,           15

மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை,

நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு

புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி,

ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்,

ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த   20

துய்த் தலை வெண் காழ் பெறூஉம்

கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. 

 

 

 

பொருள்:

தான் வளர்த்த மகளை அவள் தலைவனுடன்  வழியனுப்பி வைத்துவிட்டு,

பின்தொடர்ந்து சென்ற செவிலித்தாய் வழியில் மேயும் பெண்மான்களை

வினவுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

முலையில் முகக்கண் தோன்றுகிறது.  பற்கள்  ஒளி வீசுகின்றன .

தலையில் முடி நீண்டுள்ளது. தழை-ஆடை உடுத்திக்கொண்டுள்ளாய்.

அதனால் எங்கும் திரியும் உன் விளையாட்டுத் தோழிகளோடு வெளி

இடங்களுக்குச் செல்லாதே.இந்தப் பழமையான ஊரில் தாக்கி வருத்தும்

வயதில் மூத்த அணங்குப் பேய்கள் உண்டு. அது தாக்காமல் இருக்க உன்

காலில் காப்புப் போட்டுக்கொள். வீட்டின் எல்லையைத் தாண்டிச்

செல்லாதே. நீ இப்போது பேதைப் பருவத்துப் பெண் அன்று. அறிவு

வளர்ந்த அழகிய குறுமகள். புறத் தோற்றத்தில் பெதும்பைப் பருவம்

அடைந்திருப்பவள். இப்படி நான் சொல்லியிருந்தேன்.அதனை அவள்

 பொருட்படுத்தவில்லை. என் காப்பு எல்லையைக் கடந்தாள்.அதனால்

அழகு சிதைந்தாள். அது எனக்குத் தெரிந்துவிடும் என அஞ்சினாள்.

       இனிய மலைச்சாரலில் ஆணும் பெண்ணும் கலந்து மேயும் மான்

கூட்டத்தில் நவ்வி என்னும் ஆண்மானின் வலையில் பட்டுக்

கண்ணுக்கினிய பிணை என்னும் பெண்மான் போவது போல என் மகள்

விடலைப் பருவத்தான் ஒருவனுடன் காட்டு வழியில் போனாள். இந்த

வழியாகத்தான் போனாள். தொலைதூரம் சென்றிருக்கமாட்டாள். அந்த

விடலை பளபளக்கும் வெண்ணிற வேலை ஏந்தியவன்.

     வழிப்பறிக் கள்வர் ஆனிரைகளை அதன் தொழுவத்திலிருந்து

கட்டவிழ்த்து ஓட்டிச் சென்றால் பின்தொடர்ந்து சென்று மீட்டுக்கொண்டு

வருவார்களே, அது போல நான் செய்யவில்லை பெண்மான்களேஉங்களைக்

கேட்கிறேன்.பார்த்ததுண்டா?

     பொன் இழையில் புலிப்பல்லைக் கோத்த மணித்தாலி அவள்

 அணிந்திருப்பாள். ஒலி எழுப்பும் தாலி அது. இடையில் பல மடிப்புகளாக

தழையால் செய்யப்பட்ட மடிப்பாடை உடுத்தியிருப்பாள்.அவள் கானவன்

மகள்.பலாச் சுளைகளை மேய்ந்த குரங்குகள் உதிர்த்த பலாக்

கொட்டைகளை மகிழ்வுடன் பொறுக்கி எடுத்துக்கொள்ளும் கானவன் மகள்

அவள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்