நற்றிணை 129 பெரு நகை கேளாய், தோழி! காதலர் - அவ்வையார் - ஔவையார்

 

நற்றிணை 129 பெரு நகை கேளாய், தோழி! காதலர்


பாடியவர் : அவ்வையார்

 

பெரு நகை கேளாய், தோழி! காதலர்

ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்

பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச்

செல்ப என்ப, தாமே; சென்று,

தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை       5

வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை-

கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப,

படு மழை உருமின் உரற்று குரல்

நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே.

 

 

பொருள் :

பொலிவுடைய  கூந்தலையுடைய தோழியே  ! யாவரும் பெரிதும் நகைக்க

வல்ல ஒரு செய்தி  கேட்பாயாக!; காதலர் ஒரு நாள் நின்னைப் பிரியினும் நின்

உயிரின் தன்மை வேறுபடுகின்ற தன்மையை  உடையவள் நீ

அவர் நம்மை இங்கு நீங்குமாறு கைவிட்டுத் தாம் ஒருவரே தனியாய்

வினைவயிற் செல்லக் கருதி உள்ளாரம் ; அவர் தனியே சென்று

தமது வினை முடித்து வருமளவும்;  நிறம் விளங்கிய படப் பொறியையுடைய

பாம்பினது தலை நடுங்கும்படி  பெய்கின்ற மழையிடையிட்ட இடியினது

முழக்கத்தை நாம் இரவு நடுயாமத்துந் தனியாய்  இருந்து கேட்டு

 நமது மனையின் கண்ணே உயிர் வாழந்திருக்க வேண்டுமென்று கூறுவாராம்.  

இஃதென்ன கொடுமை காண்!

 

 கூற்று :  பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது.

தலைவனின்  வினைவயின்  பிரிவை அறிந்துகொண்ட தோழி தலைவி

  ஏற்றுக்கொள்ளுமாறு எடுத்து உரைத்தது .

நன்றி : tvu library 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்