அகநானூறு – 122 இரும் பிழி மகாஅர் பரணர்

 

 

அகநானூறு122 இரும் பிழி மகாஅர் பரணர்

 

திணை : குறிஞ்சி

கூற்று : தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்,

தலைமகன் சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.

 

 

 

இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்

விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;

மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,

வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;

பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின், 5

துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;

இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று

வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;

அர வாய் ஞமலி மகிழாது மடியின்,

பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்   10

அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;

திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,

இல் எலி வல்சி வல் வாய்க் கூகை

கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;

வளைக்கண் சேவல் வாளாது மடியின்,  15

மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;

எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்

நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,

அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,

ஆதி போகிய பாய்பரி நன் மா     20

நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்

கல் முதிர் புறங்காட்டு அன்ன

பல் முட்டின்றால் தோழி! நம் களவே.  

 

பொருள் :

அதிக மக்களைக் கொண்டது இந்த ஊர். இந்த ஊரில் திருவிழா

இல்லாவிட்டாலும் மக்கள் ஆரவாரத்துடன் உறங்காமல்

மகிழ்ந்திருக்கின்றனர். கடைத்தெருவில் உள்ள மக்கள் உறங்கினாலும்

கண்டித்துக் கடுஞ்சொல் பேசும் தாய் தூங்காமல் இருக்கிறாள்.

என்னை வீட்டில் சிறை வைத்திருக்கும் தாய் தூங்கினாலும் தூங்காமல்

ஊரைக் காக்கும் காவலர் விரைந்து நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.

கையில் வேலைக் வைத்திருக்கும் காவல் இளையர் தூங்கினாலும்,

வலப்புறமாக மயிர்முடி சுருண்டிருக்கும் நாய் மகிழ்வுடன்

குரைத்துக்கொண்டிருக்கும். என்னை உரைகல்லாக்கி உரைக்கும் நாய்

குரைக்காமல் அடங்கினால், வானத்தில் பகல் போல் ஒளியை

விரித்துக்கொண்டு நிலா காயும். நிலா மலைக்குப்

மறைந்துவிட்டால், இருள் வந்துவிடும். அப்போது இருட்டில் எலியைப்

 பிடிக்கும் கூகை கூவும். பேய் நடமாட்டம் உள்ள யாமத்தில் என்னை

அழிப்பது போல் கூவும். வளைந்த கண் கொண்ட அந்தக் கோட்டான் குரல்

கொடுக்காமல் மடிந்துவிட்டால், வீட்டிலே அடைத்து வைத்திருக்கும் சேவல்

 விடியலாகிவிட்டது என்று குரல் எடுத்துக் கூவும்.

இவை அனைத்தும் அவர் என்னிடம் வருவதற்கு இருக்கும் தடைகள்.

இந்த முட்டுப்பாடுகள் அனைத்தும் மடிந்திருக்கும் நாள் ஒன்று

வருமானால் அந்த நாளில் அவர் வரமாட்டார்.அதனால், தோழி, அவர்

என்னை அடைவதற்கு இருக்கும் முட்டுப்பாடுகள் உறையூர் அரசன்

தித்தன் அம்பறாத் தூணியில் அம்புகளை மாட்டிக்கொண்டு ஆதி தாளம்

போல் ஒலி கேட்கும்படி நடைபோடும் குதிரைமேல் செல்லும் பழக்கம்

கொண்டவன். அவன்  உறையூரைச் சுற்றியிருந்த காவல்காடு போல் பல

தடைகளை உடையதாக இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்