காலம் அறிதல் அதிகாரம் 481 kaalamarithal
காலம் அறிதல்
குறள்:1
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
குறள் விளக்கம்:
தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை
வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.
குறள்:2
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.
குறள் விளக்கம்:
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை
நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
குறள்:3
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
குறள் விளக்கம்:
செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக்
கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டோ?.
குறள்:4
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
குறள் விளக்கம்:
ஏற்ற காலத்தை அறிந்து, இடத்தோடு பொருந்தச் செய்வானாயின், அவன் உலகம் முழுதையும்
தானே ஆளக்கருதினும், அதுமுடியும்.
குறள்:5
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
குறள் விளக்கம்:
உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற
காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
குறள்:6
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
குறள் விளக்கம்:
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது
ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு
வாங்குவதைப் போன்றதாகும்.
குறள்:7
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
குறள் விளக்கம்:
அறிவுடையவர் பகைவர் தீங்கு செய்தஅப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்,
வெல்வதற்கு ஏற்ற காலத்தை நோக்கிச் சினத்தை மனத்திற்குள் அடக்கி
வைத்திருப்பர்.
குறள்:8
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
குறள் விளக்கம்:
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது
அவருடைய தலை கீழே விழும்.
குறள்:9
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
குறள் விளக்கம்:
கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு
அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.
குறள்:1 0
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
குறள் விளக்கம்:
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த
போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக